மீண்டும் மொழிப்போர் பிரச்னையை உருவாக்க வேண்டாம்: ஸ்டாலினுக்கு தமிழிசை வேண்டுகோள்
தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் பிரச்னையை உருவாக்க வேண்டாம் என்று ஸ்டாலினுக்கு தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் தீர்வுகாண வேண்டிய நிறைய பிரச்னைகள் இருக்கின்றது அதனை விடுத்து தேவை இல்லாமல் மொழியை மீண்டும் அரசியல் ஆக்க பார்க்க வேண்டாம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி, வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் தமிழிசை செளந்திரராஜன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, தமிழர்களே பெருமைப்படும் அளவிற்கு பத்ம விருதுகளில் தமிழகம் அதிகப் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது. விருது பெற்ற இளையராஜா, விஜயலட்சுமி நவதீதகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் பாஜக சார்பில் பாராட்டுகள் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழுக்கு இப்படிப் பெருமைகள் வந்து சேரும் இந்த காலகட்டத்தில், மொழிப்போருக்கான காலம் வந்துவிட்டதாக ஸ்டாலின் கூறியுள்ளார். மறுபடியும் உணர்ச்சிகளமாக கொந்தளிப்பு நிலையிலேயே தமிழகத்தை வைத்துக்கொள்ள திமுகவினர் நினைக்கின்றனர்.
மீண்டும் மொழியை அரசியல் ஆக்க வேண்டாம். தமிழகத்தில் தீர்க்கப்பட வேண்டிய நிறைய பிரச்சனைகள் உள்ளது. பேருந்து கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. வேலைக்கு போக பேருந்தை பயன்படுத்திய நிலை மாறி, பேருந்திற்கு செல்ல வேலைக்கு போக வேண்டிய நிலை தான் உள்ளது.
போக்குவரத்துத் துறை முறையாக மேம்படுத்தப்படாமல் உள்ளது. மக்களுக்கு சுமையான திட்டங்கள் வந்தால் சுட்டிகாட்டாமல் பாஜகவால் இருக்க முடியாது. தமிழகம் மறுபடியும் பரிசோதனைக் களமாக்க முடியாது. தேசியத்தின் பக்கம் தமிழக மக்கள் திரும்ப பெற வேண்டிய காலகட்டம் இது. அதற்கான கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு எந்த விதத்திலும் காரணம் அல்ல. நாடு முழுவதும் கொள்கையின் ரீதியில் விலை உயர்ந்துள்ளது. பல மாநிலங்களில் டீசல், பெட்ரோல் மீதான வரியை குறைந்துள்ளன. ஆனால், தமிழக அரசு அவ்வாறு குறைக்கவில்லை மாறாக இதில் மத்திய அரசை கைகாட்டுவது நியாயமானது அல்ல.
அதிகமாக பணம் வசூலிக்கும் நீட் பயிற்சி மையங்கள், அங்கீகாரம் பெறாத மையங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவிக்கப்பட்டதை போல தமிழக அரசு உடனடியாக அனைத்து மாவட்டங்களிலும் நீட் பயிற்சி மையங்களை தொடங்க வேண்டும் என்று தமிழிசை செளந்திரராஜன் குறிப்பிட்டார்.