அவர அப்பான்னு சொல்லாதீங்க.. நிருபர்களிடம் கோபப்பட்ட கவுசல்யா
Recommended Video
சென்னை: அவர அப்பான்னு சொல்லாதீங்க.. என நிருபர்களிடம் ஆதங்கம் வெளிப்படுத்தினார் ஆணவ கொலைக்கு பலியான சங்கரின் மனைவி கவுசல்யா.
தலித் இளைஞர் சங்கரை காதலித்து திருமணம் செய்த கவுசல்யாவையும், சங்கரையும் அவரின் தந்தை சின்னசாமி மற்றும் உறவினர்கள் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
சில தினங்கள் முன்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சின்னசாமி மற்றும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
அப்பாவுக்கு மரண தண்டனை
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் கவுசல்யா. அப்போது, உங்க அப்பாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
கோபப்பட்ட கவுசல்யா
கேள்வி எழுப்பியபோதே குறுக்கிட்ட கவுசல்யா, "அவர அப்பான்னு சொல்லாதீங்க.." என்றார். இருப்பினும் நிருபர் கேள்வியை கேட்டு முடித்தார். அப்போது பதிலளித்த கவுசல்யா, அவரை நான் அப்பா என்று கருதவில்லை. தப்பு செய்துள்ளார், தண்டனை அனுபவிக்கிறார். அப்படித்தான் நான் பார்க்கிறேன் என்றார்.
பயமாக உள்ளது
திருமணம் முடித்து 6 மாதங்கள் கழித்து எங்களை கொலை செய்ய ஆட்களை ஏவியவர்கள், இப்போதும், என்னை ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் திட்டமிட்டுக்கொண்டிருப்பார்கள். அந்த அச்சம் எனக்கு உள்ளது. தீர்ப்பு வெளியான பிறகு இதுவரை நான் யாருடைய போன் அழைப்பையும் எடுக்கவில்லை என்றார்.
மனநோயாளிகள்
முன்னதாக, தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் மோசமாக சித்தரிக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்த அவர், தான் சங்கரின் தம்பிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாகவும், இது மனநிலை சரியில்லாதவர்கள் வேலை என்றும் கூறினார்.
சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை
இதுகுறித்து பேட்டியின்போது உடனிருந்த எவிடென்ஸ் கதிர் கூறுகையில், சைபர் கிரைம் போலீசார் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குள்ளாகவே சிலரை கைது செய்திருக்க வேண்டும். வழக்கு முடிந்த பிறகு வழக்கில் தொடர்புள்ளோருக்கு சோஷியல் மீடியாக்கள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கொடுப்பதும் போலீசாரின் வேலைதான். கவுசல்யா தாய் மற்றும் தாய்மாமன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்றார்.