ஹரப்பா, மொகஞ்சதாரோ போல கீழடியில் அகழாய்வு நடந்த இடத்தை பாதுகாக்க வேண்டும்- ஹைகோர்ட்
கீழடியில் அகழாய்வு நடந்த இடத்தை மூடக்கூடாது என மதுரை ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மதுரை: ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழாய்வு நடந்த இடம் போல கீழடி அகழாய்வு நடந்த இடத்தை மூடக்கூடாது என்று ஹைகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் பெங்களூரு அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழிமதி என்பவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கீழடியில் அகழாய்வு பணிகள் நடந்த இடத்தை மூடக்கூடாது. தோண்டப்பட்ட இடம் அப்படியே இருப்பது தான் சிறப்பு. ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழாய்வு நடந்த இடம் மூடாமல் தான் உள்ளன. அகழாய்வு நடந்த தனியாருக்கு சொந்தமான இடத்தை உரிய இழப்பீடு வழங்கி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினார்.