மனிதர்களுக்குத் தான் மழைன்னா பயம், எங்களுக்கு இல்லை... நனைந்து விளையாடும் காக்கை, குருவிகள்!
மழை என்றாலே பீதியாகும் மக்களின் மத்தியில் இயற்கையும், பறவைகளும் மட்டும் வானத்தின் சொர்க்கவாசல் திறந்து கொடும் மழையை இன்பமாய் ஏற்றுக்கொள்கின்றன.
சென்னை: 3 நாள் விடாமல் பெய்த மழைக்கே டென்ஷனில் இருக்கும் மக்களே கொஞ்சம் இயற்கையை பாருங்கள். ஏங்கிக் கிடக்கும் வயல்வெளிகளும், காக்கை, குருவிகளும் மழையை எப்படி வரவேற்கின்றன என்று.
மழை வந்தாலும் குறை, வராவிட்டாலும் குறை. மழை இல்லை என்றால் தண்ணீர் பஞ்சம், மழை வந்துவிட்டாலோ தண்ணீர் மிஞ்சும். தொழில்நுட்ப வளர்ச்சி, மெஷின் வாழ்க்கை என்று எல்லாவற்றிலுமே நமக்கு என்ன நன்மை என்று பார்க்கும் குறுகிய மனம்
இதன் காரணம் தானோ என்னவோ 3 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தாலே மக்களுக்கு டென்ஷனும், இரத்த அழுத்தமும் ஏறி விடுகிறது.
வெள்ளம் வருமோ என பயம்
மழை அதிகரித்து விடுமோ, வெள்ளம் வந்துவிடுமோ என்று அஞ்சிக் கொண்டே இருக்காமல் இந்த நிமிஷத்தில் மழையை ரசித்து மகிழுங்கள். ஆக்கிரமிப்புகள் செய்தோம் அதற்கான பலன்களை அனுபவிக்கிறோம். மழை என்றாலே நமக்கு மட்டும் தான் அச்சம். நம்மை விட ஓரறிவு குறைந்தவையாக இருந்தாலும் கால்நடைகள் மட்டும் இன்றும் மழையை ஏற்றுக் கொண்டு இயற்கையோடு தான் இசைந்து வாழ்ந்து வருகின்றன.
பச்சை போர்த்திய வயல்கள்
என்ன தான் வயல்வெளிகளுக்கு மோட்டார் வைத்து நீர் பாய்ச்சினாலும், வானத்தில் இருந்து விழும் வெள்ளிக் கம்பிகள் பச்சைப் போர்த்திய வயலுக்கு புது நிறத்தை கொடுக்கும். இரண்டு நாட்கள் மழையால் தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் இருக்கும் வயல்வெளிகள் தான் இந்தக் காட்சிகள். இதனை பார்க்கும் போதே பலருக்கு அந்த வயலின் மண் வாசனையும், புத்தம் புது பயிர்களின் பச்சை வாசனையும் மனதில் நிழலாடும்.
மழையை ரசிக்கும் மாடுகள்
மாடு, ஆடு போன்ற கால்நடைகளும் கூட மனிதர்களைப் போல மழை வந்தால் பதற்றப்படுவதில்லை. மாறாக திறந்தவெளியில் ஒரு ஓரத்தில் நின்று மழையை நனைந்து ரசிக்கின்றன. சில நவீன யுகத்திற்கு ஏற்ப மழைக்கு ஒதுங்கி தன்னை பாதுகாக்கவும் செய்கின்றன.
நாரை, மீன்கொத்தியின் குறும்பு
மழை பெய்தாலும் வயிறு பசிக்குமே, இதோ இந்த நாரை மழை நீருக்குள் மீன் வருகிறதா என்று கால்கடுக்கக் காத்திருக்கிறது அதைக் கொத்திச் செல்ல. நாரைக்குத் துணையாக கருநீலத்தில் நீண்ட மூக்குடன் நானும் காத்திருக்கிறேன் என்று காத்திருக்கிறது இந்த மீன்கொத்திப் பறவை.
இயற்கையை ரசிப்போம்
நாரையும், மீன்கொத்தியும் தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்க தன் கூட்டிற்கு செல்ல முடியாமல் தவிப்பில் தென்னை மரத்தில் ஓய்வெடுக்கிறது இந்த நீலக்கருங்குயில். மனிதர்கள் அருகில் வந்தாலே பல அடி தூரம் பறந்துவிடும் பறவை கூட மழையை நின்று நிதானமாக ரசிக்கிறது.
பயத்தை ஒதுக்கி ரசிப்போம்
மழையில் நம்மை சுற்றி எஞ்சியுள்ள இயற்கையை ரசிப்போம், பயத்தை ஒதுக்கி இயற்கை பாதுகாப்போம், வரவேற்போம். அடுத்த தலைமுறைகளுக்கு இந்த வாய்ப்பு ஒரு வேளை கிடைக்காமல் கூட போகலாம்.