அணை தூர்வாரும் பணியில் மலைப் பாம்புகளைக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
கரூர்: ஸ்ரீவைகுண்டம் அணை தூர் வாரும் பணியின்போது இதுவரை 10க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகளை கொன்று குவித்தவர்கள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை தொடர்ந்து தாமிரபரணியின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் அணையில் கடந்த ஜூன் 30ம் தேதி சுப்பிரமணியபுரம் ஆற்றுப் பகுதியிலிருந்து தூர் வாரும் பணிகளை பொதுப்பணித் துறையினர் தொடங்கினர். அணை தூர்வாரும் பணி குறித்து அரசாணை வெளியிடப்படும் முன்பே சிறிய படகில் நவீன மோட்டர்களை ஆற்றின் மையப்பகுதிக்கு கொண்டு சென்று தண்ணீருக்கு அடியில் உள்ள மணலை உறிஞ்சி எடுத்து கரையில் கொட்டி சுத்தமான ஆற்று மணலை தனியாக பிரிக்கும் பணி நடக்கிறது.
ஆற்று மணலை கொண்டு செல்வதற்காக கரைகளை உடைத்தும் கரை ஓரங்களிலும் வழித்தடம் அமைக்கும் பணிகளும் நடந்தன. இந்நிலையில் ஜூலை 23ம் தேதி ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணிக்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் அணையில் குறைந்த அளவே மணல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அணைக்குள் இருக்கும் சகதி மற்றும் அமலைச் செடிகளை கூட அகற்றாமல் ஆற்று மணலை மட்டும் குறிவைத்து தூர்வாரும் பணி நடப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தூர் வாருவது என்ற பெயரில் அணையிலிருந்து மணலை கொள்ளையடிக்க திட்டமிடப்பட்டுள்ளதோ என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சந்தேக்கின்றனர்.
எனவே, இது தொடர்பாக பொதுப்பணித்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் உரிய பதில் தர வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் தூர்வாரும் பணியில் அங்குள்ள மலைப்பாம்புகள் சுமார் 10 க்கும் மேற்பட்டவைகளை கொன்று குவித்துள்ளதாக ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.
இதுகுறித்து உடனே வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கும் படி சமூக நல ஆர்வலர்களும், விலங்கு நல ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொக்லைன் வாகனங்களில் சிக்கி பாம்புகள் துடிதுடித்து உயிரிழக்கும் காட்சிகள் வாட்ஸ் அப்பில் வெளியானதை தொடர்ந்து எதிர்ப்பும் வலுத்துள்ளது.