வாழ்வோ சாவோ.. பதவியிலிருந்து விலகாதீர்கள்.. போராடுங்கள்.. ராகுல் காந்திக்கு ஒரு தொண்டனின் கோரிக்கை
சென்னை: காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் ராகுல் காந்திக்கு நமது வாசகரும், காங்கிரஸ் கட்சியின் தீவிரத் தொண்டர்களில் ஒருவர் எழுதியுள்ள பகிரங்க கடிதம்.
அன்புள்ள ராகுல் காந்திக்கு.
இந்திய அரசியல் வரலாற்றில் நூற்றாண்டை கடந்த கட்சி என்ற பெருமைமிக்கது காங்கிரஸ். இந்தக் கட்சியின் தலைவர் பதவியை தாங்கள் உதறித்தள்ளியதை, என்னைப் போன்ற கோடான கோடி தொண்டர்களை உதைத்து தள்ளுவதை போல் உணருகிறேன். ராஜீவ்காந்தியின் அரசியல் பிரவேசத்தால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு வந்தவன் நான்.
இன்று ராஜீவின் மறு உருவமாக தங்களை எண்ணி போற்றி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அவரிடம் இருந்த நெஞ்சுரம் தங்களிடம் கிஞ்சிற்றும் இல்லை என்பதை தங்களின் பதவி விலகல் முடிவு மூலம் அறிந்துகொண்டேன். காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீங்கள் விலகுவதை கட்சியை குழி தோண்டி புதைப்பதற்கான முகப்புரையாக நான் கருதுகிறேன். ஆம், தாங்கள் விலகுவதால் கட்சி முன்னேற்றப்பாதையில் செல்லும் என தவறான கணக்கு போட்டிருக்கிறீர்கள்.
உங்கள் சொல் பேச்சு கேட்காத மூத்த நிர்வாகிகள் மீதுள்ள கோபத்தை என்னைப் போன்ற அடிமட்டத் தொண்டனிடம் காட்டலாமா? ஷிண்டேவையும், கார்கேவையும், மோதிலால் வோராவையும் தலைவராக ஏற்றுக்கொண்டு தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட எந்த தொண்டனுக்கு மனம் வரும்? சற்று சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் செல்லும் பாதை பாஜகவின் கொள்கை வழிப்பாதையாக உள்ளது.
உங்களை பிரதமர் வேட்பாளராக உச்சியில் தூக்கி வைத்து கொண்டாடிய கூட்டணி கட்சித் தலைவர்கள் தங்களை பற்றி என்ன நினைப்பார்கள்? சிறு தோல்வியை ஏற்றுக்கொள்ள கூட மனப்பக்குவம் இல்லாதவரா நீங்கள்?.. தலைவர் பதவியிலிருந்து நீங்கள் விலகுவதால் காங்கிரஸ் அதலபாதாளத்திற்கு செல்லுமே தவிர ஒரு போதும் உயராது. காங்கிரஸில் இளைஞர்களுக்கு பஞ்சமா என்ன? பிறகு ஏன் அவர்களை பதவியில் அமர்த்தி கட்சியை வழிநடத்த உங்களுக்கு தயக்கம்..?.
நீங்கள் வீட்டுக்கு செல்லும் முடிவை கைவிட்டு, கட்சியில் செயல்படாத மூத்த நிர்வாகிகளை வீட்டுக்கு அனுப்புங்கள். மாநிலங்களில் செல்வாக்கு மிக்க காங்கிரஸ் தலைவர்களை அணுசரித்து செல்லுங்கள்..ஜி.கே.மூப்பனார், சரத்பவார், மம்தா பானர்ஜி, ரெங்கசாமி, ஓ.யெஸ்.ஆர். ரெட்டி, எஸ்.எம்.கிருஷ்ணா, அப்துல்லா குட்டி, ரோஷன் பெய்க் என செல்வாக்குள்ள தனி நபர்களை கட்சியில் இருந்து வெளியேற்றி அவர்களிடம் அணுசரனை காட்டாததே இன்று காங்கிரஸ் அடைந்துள்ள தோல்விக்கு மிகப்பெரும் காரணம்.
ஜீவஜோதியின் அழகு.. சபலத்தால் சரிந்த சாப்பாட்டு சாம்ராஜ்ஜியம்.. ராஜகோபால் கவிழ்ந்த கதை!
மாநிலங்களில் தங்களுக்கு ஜால்ரா அடிக்கக் கூடிய நபர்களுக்கு பதவி வழங்கி அவர்களை பவுசாக வலம் வர வைக்கிறீர்கள். ஆனால் மக்களை அன்றாடம் சந்திக்கும் அடிமட்டத் தொண்டர்களை அவர்கள் அண்டவிடுவதே இல்லை. காங்கிரஸ் வீழ்ச்சிக்கு இப்படி பல உதாரணங்களை என்னால் கூற முடியும். உங்கள் தந்தை ராஜீவ் காந்தியின் சாதுர்ய அரசியலை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டிய நேரமிது. நடுக்கடலில் கப்பலை என்னால் ஓட்ட முடியவில்லை அயர்வாக இருக்கிறது என மாலுமி கூறினால், அதில் பயணிப்பவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?.இவனை நம்பி நாம் ஏன் இந்தக் கப்பலில் ஏறினோமோ என்று தான் சிந்திக்கத் தோன்றும். இன்று அப்படித்தான் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களும், எம்.பிக்களும் உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லாத காரணத்தால் ஓட்டம் பிடித்து வருகிறார்கள்..
நாட்டுக்காக இரண்டு பிரதமர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த கட்சி காங்கிரஸ். ஆனால் உங்கள் நடவடிக்கைகளை கவனித்துப் பார்த்தால், மருத்துவர் ஊசி குத்துவதற்கு முன்பே அய்யோ, அம்மா, வலிக்குது என்று கூக்குரல் இடுவது போல் உள்ளது. தலைவர் பொறுப்பேற்று ஓன்றரை ஆண்டுகள் தான் ஆகியிருக்கிறது, ஆனால் அதற்குள் ஏன் உங்களுக்கு இவ்வளவு சலிப்பு? வெறுப்பு?.. ஏதோ பல ஆண்டுகள் தலைவர் பொறுப்பில் இருந்து சாதிக்கவில்லை என குற்ற உணர்வில் நீங்கள் இருக்கிறீர்கள் எனக் கருதுகிறேன்.
இனி எந்த முகத்தை வைத்து காங்கிரஸ் தொண்டன் கூட்டணி கட்சியினருடன் பேசுவான், ஓடிப்போன தலைவர் கட்சிக்காரனா என நம்மை விமர்சிக்கமாட்டானா? ஆகவே, வாழ்வோ, சாவோ, வெற்றியோ, தோல்வியோ பிடிவாத குணத்தை கைவிட்டு எப்போதும் போல் இந்த நூற்றாண்டு பேரியகத்தை வழிநடத்திச் செல்லவேண்டும், இளைஞர்களை புதிய நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும், மாதம் 2 மாநிலங்களில் முகாமிட்டு கட்சி வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், எனது உள்ளக்குமுறலையும் இக்கடிதம் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.