அரசியல் வேண்டாம் ப்ளீஸ்... 'அரசியல்வாதியாக' துடிக்கும் ரஜினிகாந்த்தின் பகீர் பேட்டி
அரசியலை பற்றி பேச விரும்பவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: அரசியல் குறித்த கேள்விகளுக்கு தாம் பதிலளிக்க விரும்பவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
கடந்த 21 ஆண்டுகளாக அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் அழைத்து வந்தனர். அவர்களுக்கு மௌனத்தையே பதிலாக கொடுத்து வந்தார் ரஜினி. தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும், கருணாநிதிக்கு உடல்நலமின்மையாலும் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பின்னர் தனது ரசிகர்களை ரஜினிகாந்த் கடந்த மாதம் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றார்.
போர் வரட்டும்
மேலும் போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற அந்த வார்த்தையில் அவருக்கு அரசியல் ஆசை துளிர் விட தொடங்கிவிட்டது என்பதற்கான சாட்சியாகும். எனினும் அவர் வருவதற்கு முன்பே கடும் எதிர்ப்பு கிளம்பி சுற்றிக் கொண்டிருக்கிறது.
அரசியல் கட்சியினருடன்...
காலா படப்பிடிப்புக்கு செல்லும் முன்னர், தமிழருவி மணியன், தமாகா யுவராஜ், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரங்கள் சற்று ஆறப்போட்டிருந்த நிலையில் நேற்று ரஜினிகாந்தை விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்டோர் சந்தித்தனர்.
அய்யாகண்ணு சந்திப்பு
அப்போது நதி நீர் இணைப்புக்காக தான் வழங்குவதாக கூறிய ரூ.1 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் இன்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ரஜினியை சந்தித்து பேசினார்.
அரசியலுக்கு வர வேண்டும்
இந்த சந்திப்புக்கு பின்னர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், ரஜினியை அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைத்ததாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அரசியல் வேண்டாம் ப்ளீஸ்
அப்போது அவரிடம் மதுரை எம்எல்ஏ சரவணன் மீதான கூவத்தூர் பேர வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினி, அரசியல் குறித்து பேசவிரும்பவில்லை. அர்ஜுன் சம்பத்துடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றார் அவர்.