மோடி- கருணாநிதி சந்திப்பால் ஒட்டுண்ணிகள் அச்சம்... யாரை விமர்சிக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்
மோடி- கருணாநிதி சந்திப்புக்கு திமுக கூட்டணியில் உள்ள சில ஒட்டுண்ணிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்சி : பிரதமர் நரேந்திர மோடியும், திமுக தலைவர் கருணாநிதியும் சந்தித்தது திமுக கூட்டணியில் உள்ள சில ஒட்டுண்ணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திருச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் 4-ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இந்த மாபெரும் ரெய்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தினகரன் தரப்பினரும், எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் திருச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சுய அதிகாரம் பெற்ற வருமான வரித் துறையினரின் சோதனையை அரசியலாக்க வேண்டாம். மற்ற மாநிலங்களில் பாஜகவினரின் நிறுவனங்களில் கூட வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது.
உணவுப் பொருட்கள், ஹோட்டல் உணவுகளுக்கு ஜிஎஸ்டி பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் ஜிஎஸ்டி வரியின் தேவையை வணிகர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
சென்னைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்ததில் திமுக கூட்டணியில் உள்ள சில ஒட்டுண்ணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாஜகவிடம் திமுக எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய நிலையில் பொன். ராதாகிருஷ்ணன் இவ்வாறு பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.