காந்தி கணக்கு, நேரு கணக்கு தெரியும்… குமாரசாமி கணக்கு தெரியுமா? கேட்பது ஸ்டாலின்
திருச்சி: நீதிபதி குமாரசாமியின் கணக்கு பற்றி திமுக பொருளாளர் ஸ்டாலின் போகுமிடமெங்கும் குட்டிக்கதையாக கூறி வருகிறார். சமீபத்தில் முயலுக்கு மூணு கால் கதை சொன்ன ஸ்டாலில் திருச்சியில் திருமணவிழாவில் திருடன் கணக்கு சொல்லி அசத்தியுள்ளார்.
திருச்சி தொழிலதிபர் விகேஎன் மற்றும் திமுக மாநகர செயலாளர் அன்பழகன் மகளின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திய ஸ்டாலின், வாழ்க்கையில் கணக்கு போட்டு பார்க்கணும், கணக்கு தவறானால் எல்லாம் தவறாகிவிடும். இப்போதெல்லாம் நீதிபதியே கணக்கு தவறாக போடுவது நடக்கிறது என்று கூறியுள்ளார்.
திருமண விழாவில் ஸ்டாலின் சொன்ன குட்டிக்கதையை நீங்களும் படியுங்களேன் முன்பெல்லாம் காந்திகணக்கு, நேருக்கணக்கு என சொல்வார்கள். ஆனால் குமாரசாமி கணக்கு ஒன்று வந்துள்ளது. வாட்ஸ் அப்பில் ஒரு கதை உலா வருகிறது. ஒருவீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் போலீஸில் புகார் கொடுக்காமல் இருக்கிறார்.
அவரிடம் ஏன் புகார் கொடுக்கவில்லை என நண்பர்கள் கேட்கும்போது, அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர், "திருடன் ஒருகடிதம் எழுதிவைத்துவிட்டு போயிருக்கிறான். அதில் நீ போலீஸில் புகார் கொடுத்தாலும் பரவாயில்லை. 10 சதவீதம் பொருட்களைதான் திருடியுள்ளேன். எனவே இது குற்றமில்லை!" என எழுதியுள்ளான். அதனால்தான் போலீஸிடம் புகார் கொடுக்கவில்லை. இது நான் புதிதாக சொல்லவில்லை. வாட்ஸ் அப்பில் வலம் வரும் தகவல். குமாரசாமி தீர்ப்பு இப்படிதான் உலா வருகிறது.
தமிழகத்தில் பதவியை பதவியாய் நினைக்காமல், பொறுப்பில்லாமல் செயல்படுகிறார்கள். நான் எந்த விசயங்களை செய்தாலும் தலைவர் கலைஞருக்கு தெரியாமல் எதையும் செய்யமாட்டேன். அந்த வகையில் நான் பதவியில் இருந்தாலும், பொறுப்பாய் பணியாற்றுவதையே தலைவர் விரும்புவார். தமிழைப்போல், வாழ்க!" என வாழ்தினார் ஸ்டாலின்.