கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் பரப்பும் வதந்திகளை நம்பாதீர்கள்.. ஸ்டாலின் வேண்டுகோள்!
கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மூன்றாவது நாளாக இன்றும் குன்றியுள்ளது. இதையடுத்து இரண்டாவது நாளாக இன்றும் அரசியல் கட்சியினர் பலரும் கருணாநிதி குறித்து நலம் விசாரிக்க கோபாலபுரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
திமுக தொண்டர்களும் கோபாலபுரத்திற்கு குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்டாலின் அறிக்கை
அதேநேரத்தில் கருணாநிதி உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்களும் பரவி வருகின்றன. இந்நிலையில் கருணாநிதி உடல்நிலை குறித்து அவரது மகனும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது,
வதந்திகளை நம்பாதீர்கள்
கருணாநியின் உடல்நிலை பற்றி விஷமிகள் பரப்பும் வதந்திகளை கட்சித் தொண்டர்களும் கட்சி சார்பற்ற முறையில் கருணாநிதி உடல்நிலை பற்றி அக்கறையுடன் விசாரித்து வரும் அனைத்து தரப்பு மக்களும் நம்ப வேண்டாம்.
24 மணி நேரம் சிகிச்சை
தொடர் சிகிச்சையால் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கருணாநிதிக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.
தவிர்க்கவேண்டும்
மருத்துவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கழகத் தோழர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் கருணாநிதியை சந்திக்க வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
செவி மடுக்க வேண்டாம்
விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளுக்கும் செவி மடுக்கவும் வேண்டாம். அந்த வதந்திகளை நம்பவும் வேண்டாம். இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.