மாயமான டோர்னியர் விமானத்தின் 2 எஞ்சின்கள், மேலும் பல பாகங்கள் மீட்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் 8ம் தேதியன்று மாயமான கடலோர காவற்படையின் டோர்னியர் ரக விமானத்தின் மேலும் சில பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஒத்திகைக்காக சென்ற இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் ரக குட்டி விமானம் கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி சிதம்பரம் கடல் பகுதியில் 16 கடல் மைல் தூரத்தில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென்று மாயமானது.
விமானத்தில் பயணம் செய்த வித்யாசாகர், எம்.கே.சோனி, சுபாஷ் சுரேஷ் ஆகிய விமானிகளும் அதில் மாயமானார்கள். இதையடுத்து, கடலோர காவல்படை, இந்திய கடற்படை மற்றும் தமிழக கடலோர காவல்படையும் சேர்ந்து மாயமான விமானத்தையும், விமானிகளையும் தேடி வந்தன.
ஒரு மாதத்திற்கும் மேலான தேடுதல் வேட்டையின் பலனாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் பிச்சாவரம் அருகே ஆழ்கடலில் கிடப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த விமானத்தின் கறுப்புப் பெட்டியை கரைக்கு கொண்டு வரப் பட்டு, பின்னர் அது ஆய்வுக்காக சென்னை கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் மாயமான விமானத்தின் மேலும் சில பாகங்கள் இன்று கண்டறியப்பட்டுள்ளன. கடலோர தேடுதல் குழுவின் கடும் முயற்சியால் இப்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும், மூன்று விமானிகள் நிலை குறித்த தகவல்கள் இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.
மேலும், இதுவரை மீட்கப்பட்ட விமான பாகங்களின் விவரங்கள் குறித்த தகவலை பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி டோர்னியர் விமானத்தின் கறுப்புப் பெட்டி ஏற்கனவே கிடைத்துள்ள நிலையில், இரண்டு எஞ்சின்கள், விமானத்தில் வால் பாகம் ஆகியவை இன்று மீட்கப்பட்டுள்ளன. லைப் ஜாக்கெட், காக்பிட் குரல் பதிவு சாதனம், லேண்டிங்க் கியரின் ஒரு பகுதி ஆகியவையும் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் சிதன்சு கர் தெரிவித்துள்ளார்.