மாயமான விமானத்தை தேடும் பணியில் 'ரோபோடிக் கப்பல்'!!
சென்னை: கடலோர காவல்படைக்கு சொந்தமான மாயமான விமானத்தை தேடும் பணியில் ரோபோடிக் கப்பல் ஈடுபடுத்தப்பட உள்ளது.
இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் கடந்த 8-ந் தேதி இரவு மாயமானது. அந்த விமானத்தில் 2 விமானிகள் உட்பட 3 பேர் இருந்தனர்.
விமானத்தை தேடும் பணியில் இந்திய கடலோர காவல் படை, தமிழக கடலோர காவல் படை மற்றும் புதுச்சேரி கடலோர காவல் படையினர் கடந்த 8 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியில் 8 கப்பல்களும் ஐசிஜி போர் விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் சாகர்நிதி என்ற ஆய்வுக் கப்பலும் நேற்று முதல் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நீர்மூழ்கி கப்பல் ஒன்று நேற்றுமுன்தினம் நடத்திய தேடுதலின்போது கடலூர்-நாகை இடையே பழையாறு அருகே 850 மீட்டர் ஆழத்தில் இருந்து சமிக்ஞை கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதி கடலோர காவல் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரோபோடிக் வசதியுடன் கூடிய தனியார் கப்பலையும் இந்த தேடுதல் பணிக்கு ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.