டோர்னியர் விமான விபத்து: உயிரிழந்த விமானிகளுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி – ஜெ. அறிவிப்பு
சென்னை: இந்திய கடலோரக் காவல் படையின் டோர்னியர் விமான விபத்தில் பலியான 3 இளம் விமானிகளின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலா ரூ.10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 8ம் தேதி டோர்னியர் விமான விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். மாயமான விமானத்தை ஒரு மாதத்திற்கும் மேலாக தேடி வந்த நிலையில், விமானம் கடலுக்கடியில் புதையுண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விமானிகளின் எலும்புக்கூடுகளும் சிக்கியது. அவற்றை டி.என்.ஏ பரிசோதனை செய்த போது உயிரிழந்த விமானிகளின் உடல்கள்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் உயிரிழந்த விமானிகளின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டிருந்த டோர்னியர் விமானத்தில் பயணம் செய்த கடலோரக் காவல் படை விமானி துணை கமாண்டன்ட் வித்யாசாகர், துணை விமானி டெபுடி கமாண்டன்ட் எம்.கே.சோனி, வழிகாட்டுபவராக துணை கமாண்டன்ட் சுபாஷ் சுரேஷ் ஆகிய இளம் வீரர்களின் மரணம் உறுதி செய்யப்பட்டதை அறிந்து மிகவும் துயருற்றேன்.
இந்திய கடலோரக் காவல்படை வீரர்கள், தமிழக அரசுடனும், தமிழகக் காவல்துறையுடனும் இணைந்து பல்வேறு மீட்புப் பணிகளிலும், பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை இழந்து வாழும், குடும்பத்தாருக்கு என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று விமானிகளின் குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.