இரட்டை மின்கம்பமும் கூட ஜெ. ஆன்மா அளித்த கொடைதானுங்க... ஓபிஎஸ் 'ஒரேபோடு'
இரட்டை மின்கம்பம் சின்னம் ஜெயலலிதா ஆன்மா நமக்கு அளித்த கொடை என ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: இரட்டை மின்கம்பம் சின்னம் ஜெயலலிதா ஆன்மா நமக்கு அளித்த கொடை என ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எப்போது இரட்டை விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்தோ அப்போதே நமது வெற்றி உறுதியாகிவிட்டது என்றும் ஓபிஎஸ் ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா சார்பில் போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று மாலை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட செரியன் நகர் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது,
இரும்புக்கோட்டையாக அமைத்த ஜெ.
"அப்போது எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு 17 ஆண்டுகள் மக்கள் இயக்கமாக இருந்த கட்சியை ஜெயலலிதா 1½ கோடி தொண்டர்களை கொண்ட தூய இயக்கமாக உருவாக்கி இரும்பு கோட்டையாக அமைத்தார் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
துர்பாக்கிய சூழ்நிலை
ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னால் எந்த குடும்பத்தின் கீழ் கட்சியும் ஆட்சியும் போகக்கூடாது என்று நினைத்தாரோ அவர்களுடைய கையில் சிக்கி இருக்கும் துர்பாக்கிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
நாங்கள் தர்மயுத்தம் தொடங்கியுள்ளோம்
அந்த குடும்பத்தின் துரோகத்தை தடுத்துநிறுத்தி மக்கள் இயக்கமாக தொடர நாங்கள் தர்மயுத்தம் தொடங்கி இருக்கிறோம். தர்மயுத்தம் தொடங்கிய பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பாக கிடைத்து இருக்கிறது.
ஜெ.வால் உருவாக்கப்பட்ட அளவுகோல்
இங்கு போட்டியிடும் மதுசூதனன் இந்த தொகுதியில் நன்கு அறிமுகம் ஆனவர். அனைத்து மக்களோடும் நேசமாக இருக்கக்கூடியவர். சேவை மனப்பான்மை கொண்டவர். இந்த இடைத்தேர்தல் ஒரு அளவுகோல். இந்த அளவுகோல் ஜெயலலிதா ஆன்மா மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
நாம் செய்யும் நன்றிக்கடன்
உறுதியாக மீண்டும் ஜெயலலிதா நல்லாட்சி தொடரவேண்டும். மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த ஜெயலலிதாவின் இயக்கத்தை மக்களாட்சியாக நிலைநிறுத்துவது அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.
ஜெ.ஆன்மா கொடுத்த கொடை
நமக்கு கிடைத்து இருக்கும் இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னம் இயற்கையாக ஜெயலலிதா ஆன்மா கொடுத்த கொடை. அந்த சின்னம் நமக்கு எப்போது ஒதுக்கப்பட்டதோ அப்போதே நம்முடைய வெற்றி உறுதியாகிவிட்டது.
வரலாற்று வெற்றியாக இருக்க வேண்டும்
ஆகவே இந்த தொகுதி மக்கள் உங்கள் பொன்னான வாக்குகளை மதுசூதனனுக்கு வழங்கி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழக்க செய்யும் வகையில் வரலாற்று வெற்றியாக இருக்க வேண்டும்" இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் மதுசூதனனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.