இரட்டை இலை சின்னம் தற்காலிகமாகத்தான் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.. நிரந்தரமாக அல்ல.. தம்பிதுரை ஆறுதல்!
இரட்டை இலைச்சின்னம் தற்காலிகமாகத்தான் முடக்கப்பட்டுள்ளது, நிரந்தரமாக இல்லை என லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
திருச்சி: இரட்டை இலைச்சின்னம் தற்காலிகமாகத்தான் முடக்கப்பட்டுள்ளது, நிரந்தரமாக இல்லை என லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு விரைவில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும் என்றும் தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த லோக்சபா துணை சபாநாயகரும் அ.தி.மு.க. அம்மா அணியின் கொள்கை பரப்புச் செயலாளருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆட்சிப் பொறுப்பும், கட்சி பொறுப்பும் ஒருவர் இடத்தில் இருக்க வேண்டும் என்பதை தான் வரவேற்றோம்.
ஆனால் இன்று சூழ்நிலை மாறுபட்டிருக்கின்றது. இருப்பினும் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிப்படியே இந்த ஆட்சி மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது என்றார்.
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் மாறி மாறி கருத்து கூறிவரும் நிலையில் இரு அணிகளும் இணைய வாய்ப்புள்ளதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தம்பித்துரை, இரு அணிகளும் இணைய வேண்டும் என்பது தான் கழகத்தின் ஒட்டு மொத்த தொண்டர்களின் எண்ணம்.
ஏனென்றால் அ.தி.மு.க.வில் பிளவு என்பதோ?, அணி என்பதோ? கிடையாது. அரசியலில் கருத்து வேறுபாடு வரலாம். அந்த கருத்து வேறுபாடு காரணமாகத்தான் சிலர் பிரிந்திருக்கிறார்கள்.
அ.தி.மு.க.விற்குள் பிளவு இல்லை என்பதால் தான் ஆர்.கே.நகர் தேர்தலில் கூட தற்காலிகமாகத்தான் சின்னம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதே தவிர நிரந்தரமாக முடக்கப்படவில்லை. அ.தி.மு.க.விற்கு விரைவில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும் என்றுத் தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்தார்.
பேட்டியின் போது மணப்பாறை சட்டசபை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர், முன்னாள் அமைச்சர் கே.கே. பாலசுப்ரமணியன், ஒன்றியச் செயலாளர் எம்.பி. வெங்கடாசலம், நகர செயலாளர் பவுன்.ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் முகமது இஸ்மாயில், மாவட்ட துணைச் செயலாளர் எண்டபுளி ராஜ் மோகன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.