பணம் தராததால் ஆத்திரம்... தந்தை, அக்காளின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற சிவநேசன்
செலவுக்கு பணம் தராததால் ஆத்திரமடைந்த இளைஞர் தனது தந்தை மற்றும் அக்காளின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்றார்.
திருவண்ணாமலை : செலவுக்கு பணம் தராததால் ஆத்திரமடைந்த இளைஞர் குடிபோதையில் தந்தை மற்றும் அக்காளின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் கோவில்மாதிமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். தபால் ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
மூத்த மகள் கல்யாணிக்கு திருமணமாகிவிட்டது. எனினும் கணவருடன் ஏற்பட்ட தகராறால் அவர் தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் மகன் சிவநேசனும் அதே வீட்டில் வசித்து வருகிறார்.
குடும்பத்தினருடன் சண்டை
சிவநேசனுக்கு வேலை வெட்டி ஏதும் கிடையாதாம். அவர் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து அக்காளுடனும், தந்தையுடனும் சண்டையிட்டுக் கொள்வதுதான் வழக்கமாக இருந்ததாம்.
குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு
இந்நிலையில் கல்யாணியை அவரது கணவர் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சிவநேசன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. சிவநேசன் குடிப்பதற்கு பணம் தருமாறு தந்தையிடம் இன்று காலை கேட்டுள்ளார்.
தட்டிக் கேட்ட அக்காள்
அதற்கு அவர் மறுத்துவிட்டார். அவருடன் சிவநேசன் சண்டையிடுவதை பார்த்த கல்யாணி தம்பியை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவருடனும் சிவநேசன் சண்டையிட்டுள்ளார்.
கொலை செய்துவிட்டு தப்பியோட்டம்
இதனால் ஆத்திரமடைந்த சிவநேசன் அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து ராமச்சந்திரன் மற்றும் கல்யாணி ஆகியோர் தலையில் போட்டு படுகொலை செய்துவிட்டார். போலீஸிடம் மாட்டாமல் இருக்க வீட்டை விட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து கலசப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிவநேசனை தேடி வருகின்றனர்.