குமரி - மதுரை, மணியாச்சி-தூத்துக்குடி இரட்டை மின் ரயில் பாதைக்கு நாளை அடிக்கல் நாட்டு விழா
குமரி- மதுரை மற்றும் மணியாச்சி- தூத்துக்குடி இடையே இரட்டை மின் ரயில் பாதைக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது.
கன்னியாகுமரி: ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பில் நாகர்கோவில் - மதுரை & மணியாச்சி-தூத்துக்குடி இடையே இரட்டை மின் ரயில் பாதை திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை,செவ்வாய்க்கிழமை (ஜன. 23) நாகர்கோவிலில் நடைபெறுகிறது.
தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரட்டை மின் ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ரூ. 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 23) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
விழாவுக்கு, மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். இதில் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜன்கொகைன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், இவ்விழாவில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை எண் 2 மற்றும் 3-இல் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்கள்) தொடக்க விழா, ரயில் நிலையம் முழுவதும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டதன் தொடக்க விழா ஆகியனவும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை ரயில்வே துறையினர் செய்து வருகின்றனர்.