தனியார் பேருந்துகளில் 2 மடங்கு கட்டணம்... போக்குவரத்து அதிகாரிகள் முறைப்படுத்துவார்களா?
சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகளில் அதிகமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை போக்குவரத்து அதிகாரிகள் முறைப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை: சென்னையில் இருந்து நீண்ட தூர ஊர்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகளில் அதிகமாக வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
நெல்லை, கோவை, திருச்சி, மதுரை, குமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னையில் பணி நிமித்தமாக உள்ள மக்கள் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அரசு பேருந்துகளில் களைப்பாக நீண்ட தூரம் செல்வதை பொதுவாக மக்கள் விரும்புவதில்லை.
ரயில்களில் முன்பதிவு கிடைக்காவிட்டால் பயணிகள் நாடுவது தனியார் பேருந்துகளைத்தான். ஆனால் அவர்களோ பண்டிகை காலங்களில் தங்களது கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்கின்றனர்.
அதுபோல் இந்த தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு வெள்ளிக்கிழமை முதலே புறப்பட்டு வருகின்றனர். இதை சாக்காக வைத்துக் கொண்டு தனியார் பேருந்துகள் மக்களிடம் அதிக கட்டணத்தை வசூலிக்கின்றன.
சென்னையிலிருந்து திருச்சி செல்ல சாதாரண நாள்களில் தனியார் பேருந்துகளில் ரூ.600- ரூ.700 வரையும், கோவை செல்ல ரூ.700- ரூ.900 வரையும், கன்னியாகுமரிக்கு ரூ.750 வரையும் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் தீபாவளி பண்டிகையைஒட்டி திருச்சிக்கு ரூ.1500 வரையும், கோவைக்கு ரூ2500 வரையும், குமரிக்கு ரூ.1300 என கட்டண இரட்டிப்பாக வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து பேருந்து நிர்வாகத்திடம் கேட்டாலும் பதில் ஏதும் இல்லை. மழை காலம் என்பதால் ஊர் போய் சேர்ந்தால் போதும் என மக்களும் அதிக அளவு கட்டணம் கொடுத்து பயணிக்கின்றனர். இந்த கட்டணக் கொள்ளையை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு முறைப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.