கொலை வழக்கு: கொழும்பில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் டக்ளஸ் தேவானந்தா ஆஜர்- தமிழகத்தில் முதல்முறை
சென்னை: இலங்கையின் கொழும்பில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா சூளைமேடு கொலை வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் ஆஜரானார். வெளிநாட்டில் இருக்கும் ஒருவரிடம் இப்படி வீடியோகான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தப்படுவது தமிழகத்தில் இதுதான் முதல்முறையாகும்.
ஈபிடிபி இயக்கத்தின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா 1986-ல் சென்னையில் தங்கியிருந்தார். அப்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அப்பகுதி மக்கள் வெடி வெடித்தனர். இதற்கு டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், டக்ளஸ் தேவானந்தா ஆட்கள் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் திருநாவுகரசு என்ற இளைஞர் உயிரிழந்தார்.
இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து டக்ளஸ் தேவானந்தா உட்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை 4வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதன்பின்னர் இந்த 10 பேரும் இலங்கைக்கு சென்று விட்டனர். இதில் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருக்கும்போது, சிறு தொழில்துறை அமைச்சராகவும் இருந்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தா மட்டும் அடையாளம் தெரிந்தது. அவர் மீதான வழக்கை விசாரிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து, டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே ஈபிடிபி இயக்கத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குருமூர்த்தி உட்பட 4 பேர் இந்த வழக்கில் சாட்சியம் அளித்தனர். அவர்கள், தங்கள் மீது துப்பாக்கியால் சுட்டது ஆனந்தன் என்ற இலங்கை தமிழர் என்று கூறினர்.
இதனால், குற்றவாளியை அடையாளம் காட்டி அவர்கள் சாட்சியம் அளிக்க வேண்டியது இருந்தது. இதுகுறித்து 4வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி எம்.சாந்தி, சென்னை மாவட்ட முதன்மை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.
இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற பதிவாளர் எஸ்.பி. ரிஷிரோஷன், நீதிமன்ற அதிகாரி எஸ்.சுந்தரபாண்டியன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி.) மூலம் இலங்கையில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. முன்னோட்டமாக நேற்று மாலை வீடியோ கான்பரன்சிங் சேவையை இயக்கி, பரிசோதிக்கப்பட்டன. இதன்படி, இன்று காலை சரியாக 10 மணிக்கு, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கு டக்ளஸ் தேவானந்தா ஆஜரானார். அவரை அங்குள்ள வீடியோ கேமிரா முன்பு நாற்காலி போட்டு அங்குள்ளவர்கள் அமர வைத்தனர்.
அதேபோல, வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சி குருமூர்த்தி உள்ளிட்ட 4 பேர் சென்னை 4வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க ஆஜரானார்கள். காலை 10.35 மணிக்கு டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் பிரத்யேகமாக மிகப்பெரிய திரை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த திரையில் தெரிந்த டக்ளஸ் தேவானந்தாவை, போலீஸ் தரப்பு சாட்சிகள் குருமூர்த்தி, வீரமுத்து ஆகியோர் அடையாளம் காட்டினார்கள். திருநாவுக்கரசு உள்ளிட்டோர் மீது துப்பாக்கியால் சுட்டவர் இவர்தான் என்று அடையாளம் காட்டினர். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 15ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எம்.சாந்தி உத்தரவிட்டார்.
வெளிநாட்டில் உள்ள குற்றவாளியிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிப்பது தமிழக நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.