இடிந்தகரையில் நள்ளிரவில் கடலில் இறங்கி அணு உலை எதிர்ப்பாளார்கள் போராட்டம்
நெல்லை: நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நள்ளிரவில் அணு உலை எதிர்ப்பாளர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் அணு உலையில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போராட்டக்குழுவை சேர்ந்த பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் முதல் கூடங்குளம் முதல் அணு உலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேலும் 2 ஆவது அணு உலையில் மின் உற்பத்தி செய்வதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதோடு, 3, 4 ஆவது அணு உலை அமைப்பதற்கான ஆயத்த பணிகளும் தொடங்கியுள்ளது. இதனால் அணு உலை போராட்டக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் கூடங்குளத்தில், 3, 4 ஆவது அணு உலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணு உலை போராட்டக்குழு சார்பில் இடிந்தகரையில் நேற்று நள்ளிரவு கடலில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு அணு உலை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், முகிலன் ஆகியோர் தலைமை தாங்கினர். பெண்கள், குழந்தைகள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இடிந்தகரை ஆலயத்தில் புத்தாண்டு பிரார்த்தனை நடத்தி முடித்து விட்டு அங்கிருந்து கடற்கரைக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அணு உலையை மூடக்கோரி கோஷம் எழுப்பினர்.
முன்னதாக நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே கூத்தகுளி கிராமத்தில் நேற்று இரவு பாத்திமா நகரில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. 6 வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் வீசியதாகவும் தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் அணு உலை எதிர்ப்பார்பாளர்களின் இப்போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.