வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை... கணவன், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை
சேலம்: இளம்பெண்ணிடம் வரதட்சனைக் கேட்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவன், மாமியாருக்கு 10-ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மணிவிழுந்தான் காலனியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் கவுரி. இவருக்கும், தலைவாசல் அருகிலுள்ள சித்தேரியை சேர்ந்த செல்லம்மாள் மகன் இரவிக்குமார் என்பவருக்கும், கடந்த, 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, கவுரிக்கு 25-பவுன் நகை, பைக் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டது.
இவர்களுக்கு சில ஆண்டுகளாக குழந்தை பிறக்காததை காரணமாக வைத்து, கூடுதல் வரதட்சணை கேட்டு கவுரியின் கணவன் இரவிக்குமார் மற்றும் அவரது தாய் செல்லம்மாள் ஆகியோர் கொடுமை படுத்தியுள்ளனர். இதனால், கவுரி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றார்.
இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி கவுரிக்கு போன் செய்த இரவிக்குமார் அவரை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த கவுரி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இரவிக்குமார் மற்றும் அவரது தாய் செல்லம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி விஜயகுமார் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார், அப்போது, இரவிக்குமார், செல்லம்மாள் ஆகிய இருவருக்கும், தலா, 7 ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதற்கு தலா, 3 ஆண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து, தண்டனையை தனித்தனியே அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.