அப்துல் கலாம் மணி மண்டபம் கட்டியது எங்களின் பாக்கியம் - தொழிலாளர்கள் நெகிழ்ச்சி!
முன்னாள் குடியரசுத் தலைவர் மணிமண்டபம் கட்டும் பணியில் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரும் பாக்கியம் என்று தொழிலாளர்கள் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம்: இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாமின் மணி மண்டபம் திறப்புவிழாவிற்கு 10 நாட்களுக்கு முன்னரே கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் என்று கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய இளைஞர்களின் ஆதர்ச வழிகாட்டியாகக் கருதப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது உயிரிழந்தார். அவரது பூத உடல், முழு அரச மரியாதைகளை தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் உள்ள பேய்கரும்பு என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அப்துல் கலாம் மணிமண்டபம்
அப்துல் கலாம் நினைவாக மத்திய அரசு சார்பில் ரூ.50 கோடி செலவில் மணிமண்டபமும், அறிவுசார் மையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணியை, கடந்த ஆண்டு மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், வெங்கய்ய நாயுடு ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். தற்போது மணிமண்டபம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 27-ஆம் தேதி, அப்துல் கலாமின் 2வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய நாளிலேயே, பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மணி மண்டபத்தை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் பாக்கியம்
இந்நிலையில் கட்டுமானப் பணிகள் குறித்து டிஅர்டிஓவின் கட்டுமானப் பிரிவு அதிகாரி அஜய்சிங் திறப்பு விழாவிற்கு 10 நாட்கள் முன்னதாகவே கட்டுமானப் பணிகள் முடிந்துவிடும் என்று தெரிவித்துள்ளார். நாட்டில் மிகப்பெரிய கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட போது கலாமின் மணிமண்டபம் அமைக்கும் பணி மிகவும் சிறப்பானது என்றும், தான் மட்டுமல்ல இங்கு பணியாற்றிய பல்வேறு மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் இதை ஒரு பெரும் பாக்கியமாக நினைத்து கட்டுமானப் பணியை செய்ததாக குறிப்பிடுகிறார் அஜய்சிங்.
உயர் ரக கற்கள்
வசதிகள் கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், வயரிங், ஏர்கண்டிஷன் வசதி உள்ளிட்டவை பொருத்தப்பட்டு வருகின்றன. கலாம் மியூசியத்திற்காக டெல்லி, பெங்களூரு, சென்னையில் இருந்து பொருட்கள் இந்த மாத இறுதியில் வர உள்ளது. முற்றிறுலும் உயர்ரக பளிங்கு கற்களால் மணிமண்டப சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் நெகிழ்ச்சி
ஹரியானா, மேற்குவங்கம், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு கட்டுமானப் பணிகளைச் செய்து வருகின்றனர். நாடே மதிக்கும் ஒரு தலைவரின் மணிமண்டபம் அமைப்பதற்காக வாய்ப்பு கிடைத்தது எங்களின் வாழ்நாள் பாக்கியம். இந்தப் பணியில் ஈடுபடுவதாலேயே தங்கள் ஊரில் தனி மரியாதை இருப்பதாகவும் தொழிலாளர்கள் நெகிழ்ச்சியோடு கூறுகின்றனர். மேலும் பணியை திட்டமிட்டபடி முடிக்க 3 ஷிப்டுகளில் ஓய்வின்றி உழைத்த வருகின்றனர் தொழிலாளர்கள்.
எப்படி இருக்கிறது மணிமண்டபம்
இதனிடையே அப்துல் கலாமின் மணிமண்டப கட்டுமானப் பணிகள் குறித்து பில்லியன் பீட்ஸ் என்ற அமைப்பு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் கலாம் நினைவிடத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கியது முதல் தற்போதைய நிலவரம் வரை காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துவிட்டு பேய்க்கரும்பில் உறங்கும் கனவு நாயகன் கலாமிற்காக கட்டப்பட்டுள்ள மணி மண்டபக் காட்சிகளை நீங்களும் பாருங்கள்.