எத்தனை முறை சொன்னாலும் வந்து ஆஜராவேன்... கைரேகை பதிவு டாக்டர். பாலாஜி!
ஜெயலலிதா கைரேகை பதிவு செய்த போது உடன் இருந்த மருத்துவர் பாலாஜி விசாரணைக் கமிஷன் முன்பு 3வது முறையாக ஆஜராகியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது இடைத்தேர்தலுக்காக அவருடைய கைரேகை பதிவு செய்யப்பட்ட போது உடன் இருந்த டாக்டர் பாலாஜி 3வது முறையாக விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜரானார். சுமார் 3 மணி நேர விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எத்தனை முறை அழைத்தாலும் வந்து நடந்தவற்றை சொல்வேன் என்றார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது, அதிமுக வேட்பாளருக்கான அங்கீகாரப் படிவத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஜெயலலிதாவின் கைரேகை குறித்து திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணன் ஜெயலலிதா விசாரணைக் குழுவிடம் விசாரிக்குமாறு கோரி இருந்தார்.
ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது என்று சரவணன் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவர் சரவணனின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வகையில் ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றளித்த மருத்துவர் பாலாஜிக்கு ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியது.
சம்மனை ஏற்று டாக்டர் பாலாஜி டிசம்பர் 7 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதாவின் கைரேகை தனது முன்னிலையில் தான் பதிவு செய்யப்பட்டதாகவும், அப்போது அவர் சுயநினைவோடு இருந்ததாகவும், கையெழுத்து போட முடியாததால் கைரேகை பதிவு செய்தார் என்றும் பாலாஜி கூறி இருந்தார்.
இந்நிலையில் இன்று 3வது முறையாக விசாரணைக் கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி மீண்டும் ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தியது.
விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பாலாஜி கூறியதாவது : ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை விசாரணை ஆணையம் கேட்டது. ஜெ. சிகிச்சை குறித்த விவரங்களை விளக்கினேன். ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் அழைத்தால் விசாரணைக்கு ஆஜராவேன் என்றும் அவர் தெரிவித்தார்.