ஜெ. கைரேகை விவகாரம்: விசாரணை கமிஷனில் மருத்துவர் பாலாஜி 3வது முறையாக ஆஜர்!
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் பாலாஜி இன்று மூன்றாவது முறையாக ஆஜரானார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் பாலாஜி இன்று மூன்றாவது முறையாக ஆஜராகி விளக்கமளித்தார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் பலருக்கும் சம்மன் அனுப்பி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் ஆணையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என்று விசாரணை ஆணையம் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தது.
கைரேகையில் சந்தேகம்
இதைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சரவணன், பிரமாணப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரின் வேட்புமனுவுடன் வழங்கப்பட்ட ஆவணத்தில் இருந்த கைரேகை ஜெயலலிதாவுடையதுதானா என்பதில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
அறிக்கையாக அளிக்க..
இதையடுத்து கைரேகை பதிவின்போது உடன் இருந்ததாக தெரிவித்த அரசு மருத்துவர் பாலாஜியை விசாரணை ஆணையம் இரு முறை அழைத்து விசாரித்தது. அதில் மருத்துவர் பாலாஜி கூறிய தகவல்களை அறிக்கையாக அளிக்குமாறு விசாரணை ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
இன்று ஆஜரானார்
அதன் அடிப்படையில் மருத்துவர் பாலாஜி இன்று 3-வது முறையாக விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். பின்னர் வெளியே வந்த அவர் அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம் பேசினார்.
விசாரணை ஆணையத்தில் பதில்
அப்போது ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான குறிப்புகளை விசாரணை ஆணையத்தில் அளித்ததாக கூறினார். மருத்துவ குறிப்பு சார்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார். தேவைப்பட்டால் விசாரணைக்கு அடுத்த மாதம் வரவேண்டியிருக்கும் என்றும் மருத்துவர் பாலாஜி தெரிவித்தார்.