ஆமா, விஜயபாஸ்கரிடம் ரூ5 லட்சம் வாங்கியது உண்மையே.. டாக்டர் பாலாஜி பரபர விளக்கம்
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ரூ5 லட்சம் வாங்கியது உண்மைதான் என்றும் ஏன் அந்த பணத்தை வாங்கினேன் எனவும் டாக்டர் பாலாஜி விளக்கம் அளித்திருக்கிறார்.
சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ரூ5 லட்சம் வாங்கியது உண்மைதான்... அது ஜெயலலிதா கை ரேகையை பதிவு செய்யவதற்காக வாங்கவில்லை என மருத்துவர் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் கீதா லட்சுமி, நடிகர் சரத்குமார் ஆகியோர் வீடுகளில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
|
ரூ89 கோடி ஆவணம்
இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் ஒன்று ஆர்கே நகரில் ரூ89 கோடிக்கு பணப் பட்டுவாடா நடந்தது என்பது. மற்றொன்று கீதாலட்சுமியின் வீட்டில் கைப்பற்ற நவம்பர் மாத வரவு செலவு பட்டுவாடா.
டாக்டர் பாலாஜிக்கு ரூ5 லட்சம்
இதில் ஜெயலலிதாவின் கை ரேகையைப் பெற்ற டாக்டர் பாலாஜிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவால் ரூ5 லட்சம் கொடுக்கப்பட்டதாக இடம்பெற்றுள்ளது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தேர்தலின் போது ஜெயலலிதாவின் கை ரேகையைப் பெற்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
வாங்கியது உண்மையே...
அந்த கைரேகையைப் பெறுவதற்காக டாக்டர் பாலாஜிக்கு ரூ5 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதா? என்ற புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இந்த நிலையில் தாம் விஜயபாஸ்கரிடம் ரூ5 லட்சம் பணம் வாங்கியது உண்மையே என்றும் அது லண்டன் டாக்டர் பீலேவின் ஹோட்டல் பில்லுக்கானது எனவும் விளக்கம் அளித்துள்ளார் டாக்டர் பாலாஜி.
லஞ்சம் அல்ல...வதந்தி
ஜெயலலிதாவின் கைரேகையை பெறுவதற்காக தாம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் மருத்துவர் பாலாஜி மறுத்துள்ளார். அப்படி பரபரப்படும் வதந்தியில் எந்த ஒரு உண்மையுமே இல்லை எனவும் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.