என்னுடைய அதிகாரத்துக்குட்பட்டே ஜெ.விடம் கைரேகை பதிவு... டாக்டர் பாலாஜி அந்தர் பல்டி!
தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்டே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கைரேகை பதிவு பெற்றதாக டாக்டர் பாலாஜி புதிய விளக்கத்தை தந்துள்ளார்.
Recommended Video
சென்னை : ஜெயலலிதாவிடம் கைரேகை பதிவு செய்ய யாரும் உத்தரவு பிறப்பிக்கவில்லை வாய்மொழி உத்தரவின் பேரிலேயே பதிவு செய்யப்பட்டதாக டாக்டர் பாலாஜி கூறி விசாரணை ஆணையத்திடம் கூறி இருந்தார். இதற்கு தான் எந்த வாய்மொழி உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்த நிலையில் தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்டே ஜெயலலிதாவிடம் கைரேகை பதிவு செய்ததாக டாக்டர் பாலாஜி புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை மேற்பார்வையிட அரசு சார்பில் 5 மருத்துவர்கள் அடங்கி குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் அரசு மருத்துவர் பாலாஜியும் இடம் பெற்று இருந்தார்.
திருப்பரங்குன்றம் உள்பட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்த போது ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது தேர்தல் படிவங்களில் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. தனது முன்னிலையிலேயே ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டதாக மருத்துவர் பாலாஜி சான்றொப்பம் அளித்துள்ளார்.
டாக்டர் பாலாஜியின் சாட்சியம் முக்கியம்
இதனால் ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் மருத்துவர் பாலாஜி முக்கிய சாட்சியமாக விசாரிக்கப்பட்டு வருகிறார். ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதத்தில் 2 முறை இவர் ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார். இந்த நிலையில் நேற்று 3-வது முறையாக நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு அவர் ஆஜரானார்.
சங்தேகங்களுக்கு விளக்கம்
சுமார் 3 மணி நேரமாக நேற்றும் மருத்துவர் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜெயலலிதாவிற்கு அப்பல்லோவில் தான் சிகிச்சை நடைபெற்றது என்பதால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை கமிஷன் கேட்டறிந்ததாக பாலாஜி கூறி இருந்தார். மேலும் அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த ஆவணங்களின் படி நீதிபதிக்கு எழுந்த சில சந்தேகங்கள் குறித்தும் விளக்கம் பெற்றதாக கூறினார்.
சரமாரியாக கேள்வி எழுப்பிய கமிஷன்
ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றொப்பமிட உங்களை அழைத்தது யார்?, முதல்வராக இருந்த ஒருவரின் கைரேகைக்கு சான்றொப்பமிட வேண்டும் என்றால் தலைமைச் செயலாளரோ முதல்வரின் பொறுப்புகளை கவனித்து வரும் மூத்த அமைச்சரோ உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுபோன்று உங்களுக்கு ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா? என்றும் நீதிபதி நேற்றைய விசாரணையின் போது கேட்டுள்ளார்.
வாய்மொழி உத்தரவு வந்தது
அதற்கு மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றொப்பமிட யாரும் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றும், வாய்மொழி உத்தரவின் பேரில் சான்றொப்பமிட்டதாகவும் கூறியதாக ஆணையம் தரப்பில் வெளியானது. இந்நிலையில் டாக்டர் பாலாஜியின் கமிஷனிடம் கூறிய விவரங்கள் குறித்து கருத்து தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முதல்வர் என்ற முறையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு தேவையான மருத்துவர்கள் ஒருங்கிணைப்புப் பணிகளை சுகாதாரத்துறை மேற்கொண்டது.
மறுத்த சுகாதாரத்துறை செயலாளர்
அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், வந்து மருத்துவம் பார்ப்பதற்காக மருத்துவர்களுக்கு அனுப்பிய எழுத்துப்பூர்வமான கடிதங்கள் சுகாதாரத்துறையிடம் உள்ளன. ஆனால் கைரேகை பெற்றதை பொறுத்தவரையில் நான் டாக்டர் பாலாஜிக்கு வாய்மொழி உத்தரவையோ எழுத்துப்பூர்வமாகவோ எதையும் கொடுக்கவில்லை என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
டாக்டர் பாலாஜி புதிய விளக்கம்
சுகாதாரத்துறை செயலாளரின் இந்த பதிலை அடுத்து ஜெயலலிதா கைரேகை பதிவு குறித்து புதிய விளக்கத்தை தந்துள்ளார் டாக்டர் பாலாஜி. தேர்தல் ஆணைய விதிமுறைப்படியே ஜெயலலிதாவின் கைரேகையானது பெறப்பட்டது. என்னுடைய அதிகாரத்துக்கு உட்பட்டே ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றேன் என்றும் டாக்டர் பாலாஜி தற்போது கூறியுள்ளார்.