சமத்துவமற்ற கட்சி சமக... பாஜகவில் இணைந்த ஜெமீலா பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: சமத்துவ மக்கள் கட்சியின் முன்னாள் மாநில அணி துணைச்செயலாளரான எம்.ஆர். ஜெமீலா, டெல்லி சென்று அதிரடியாக பாஜகவில் இணைந்துள்ளார். அவரது பேஸ்புக் பக்கத்தில் சமகவினர் கண்ட கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜெமீலா, முதலில் என்னை முகநூலில் மிரட்டுவதை நிறுத்துங்கள். தேவைப்பட்டால் காவல்துறையை அணுகுவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் பிறந்தவர் ஜெமீலா. தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்டவரான ஜெமீலாவின் தந்தை தர்மபுரி மாவட்டத்தின் பல இடங்களில் தொழுநோய் ஆய்வாளராக பணி புரிந்த காரணத்தால், தர்மபுரி மாவட்டமே ஜெமீலாவுக்கு சொந்த மாவட்டமாகிப் போனது. தனது மேல்நிலை கல்வியையும், கல்லூரி படிப்பையும் திருநெல்வேலியில் படித்தார். பயிற்சி மருத்துவராக நாகர்கோவில் கோட்டார் அரசு மருத்துவமனையில் பணி புரிந்தார்.
1997 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ பட்டமும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் படிப்பில் சான்றிதழும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தில் பெற்றார். 1999 ஆம் ஆண்டு முதல் சென்னையில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த ஜெமீலா, 2005 ஆம் ஆண்டு முதல் பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் நிர்வாக பிரிவில் இயக்குநராக உள்ளார்.
பெண்கள் மட்டுமல்லாது திருநங்கைகளின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்ற நோக்கில் திருநங்கை சமூதாயத்திற்கென பல்வேறு உதவிகளையும் சேவை மனப்பான்மையோடு செய்து வருகிறார். பல்வேறு திருநங்கை நல அமைப்புகளின் சார்பாக ' சிறந்த சமூக ஆர்வலர்' விருதும் பெற்றுள்ளார். அரசியலில் ஈடுபாடு கொண்டமையால் கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னை அரசியலிலும் இணைத்துக்கொண்டார். அக்கட்சியில் மாநில மகளிரணி துணைச்செயலாளர் பொறுப்பிலும், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிச்செயளாலராகவும் இருந்து மக்கள் பணியாற்றி வந்த ஜெமீலா இப்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
புத்தாண்டில் வாழ்த்து
2016ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று சரத்குமார், ராதிகாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ஜெமீலா, அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த 20 நாட்களில் என்ன நடந்ததோ காட்சிகள் முற்றிலும் மாறிவிட்டன. சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து அவரை கட்சியை விட்டு நீக்குவதாக கூறினார் தலைவர் சரத்குமார்.
சமத்துவமில்லையாம்
சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து விலகிய பின்னரே தன்னை சரத்குமார் நீக்கியதாக கூறியுள்ளார் ஜெமீலா. பெயரளவில்தான் சமத்துவம் இருக்கிறதே தவிர கட்சியில் சமத்துவம் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். நடிகையை முன்னிறுத்துவது ஏன் என்று கேட்டுள்ள ஜெமீலா. மாவட்ட தலைவரை நடுரோட்டில் அடித்தனர் அதை தலைமை கேட்கவில்லை.
மரியாதை இல்லை
மகளிரணித் தலைவியை நாங்கள் இதுவரை கட்சி அலுவலகத்திற்கு வந்து பார்த்ததே இல்லை என்று கூறியுள்ள ஜெமீலா, ஜால்ரா போடுபவர்கள் மட்டுமே இங்கு இருக்க முடியும் என்றும் கூறியுள்ள ஜெமீலா, சமத்துவ மக்கள் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்று கூறியுள்ளார். தினசரி அறிக்கை அரசியல் செய்யும் இயக்கத்தில் தான் பணிபுரிய விரும்பவில்லை என்பதால் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
ஓடி ஒதுங்க மாட்டேன்
பாஜகவில் இணைந்த பின்னரும் சமத்துவ மக்கள் கட்சியினர் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவிடுவதாக குற்றம் சாட்டியுள்ள ஜெமீலா, நீங்களாக விலகிக்கொள்வது நல்லது. உங்கள் பதிவுகளில் மரியாதைக்குறைச்சலாக , ஆபாசமாக பதிவிடுவீர்கள் என்றால் நான் மீண்டும், மீண்டும் கருத்துக்களையும் விளக்கங்களையும் கொடுத்துக்கொண்டு தான் இருப்பேன். முதலில் என்னை முகநூலில் மிரட்டுவதை நிறுத்துங்கள். தேவைப்பட்டால் காவல்துறையை அணுகுவேன் என்று கண்டனம் தெரிவித்துள்ளார் ஜெமீலா.