கச்சநத்தம் படுகொலைக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம்- தலைநகரங்களில் 31-ல் ஆர்ப்பாட்டம்
கச்சநத்தத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை: மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராம மக்கள் மீதான தாக்குதலுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன் ஆகிய இருவரும், ஆவாரங்காடு கிராம ஒரு சாதிப் பிரிவினரால் நேற்று (28.05.2018) நள்ளிரவில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று இருக்கிறார்கள். அவர்களுடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்திற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புகார் தந்தும் பலனில்லை
ஆண்டுதோறும் தியாகி இம்மானுவேல் நினைவஞ்சலிக்கு பரமக்குடி சென்று திரும்பும் பொழுதெல்லாம் சாலைகளின் இருபுறமிருந்து கல்லெறிவதும், தாக்கிக் காயப்படுத்துவதும் ஆவாரங்காடு மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த குறிப்பிட்டபிரிவினரே ஆவர். நாம் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
கட்ட பஞ்சாயத்துதான் காரணம்
எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கிற ஒரே காரணத்தினால், கச்சநத்தம் உள்ளிட்ட சில கிராம மக்களை, பல்வேறு கிராமங்களிலிருந்து வந்து ஆவாரங்காடு கிராமத்தில் குடியிருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளை ஏவி வந்துள்ளனர். பழையனூர் காவல்நிலைய அதிகாரிகள் மேற்படி வன்முறைக் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, கட்டப்பஞ்சாயத்து, சமாதானம் என்ற மென்மையான போக்கை கடைபிடித்ததன் விளைவுதான், தற்போது கச்சநத்தம் ஏற்பட்டுள்ள கொடும் தாக்குதலுக்குக் காரணமாகும்.
தமிழக அரசு தயங்கக் கூடாது
தமிழ்நாடு அரசும், சிவகங்கை மாவட்டக் காவல்துறையும் சமூகங்கள் மீது நடைபெறும் வன்கொடுமைகளைத் தடுக்க சிறிதும் தயக்கம் காட்டக் கூடாது என எச்சரிக்கிறேன். தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
உஞ்சனை கோவில்
40 ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் உஞ்சனையில் ஜீன் 28-ந்தேதி கோவில் பிரச்சினையில் படுகொலை நடந்ததோ, அதே சிவகங்கை மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்குப் பின்பும் மே-28-ந்தேதி அதே கோவில் விழாவில் வன்முறைக் கும்பல் தாக்குதல் தொடுத்திருக்கிறது. இந்த வன்முறைச் சம்பவத்தை கண்டித்து வருகிற 31.05.2018 அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
அரசு இழப்பீடு தர வேண்டும்
தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்டத்தில் நிலவும் வன்கொடுமைகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், ஆறுமுகம், சண்முகநாதன் ஆகிய இருவரை படுகொலை செய்த வன்முறைக் கும்பலைக் கைது செய்யவும், இருவர் குடும்பத்திற்கும் தலா ரூ.20 இலட்சம் வழங்கிடவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும், படுகாயமுற்றோருக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.