ஜெ.வுக்காக தனியார் கல்வி நிறுவனங்களை மூடுவதா?: டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்
சென்னை: நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி தனியார் கல்வி நிறுவனங்களை மூடுவதற்கு புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெயலலிதா தன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளியென தீர்ப்பு வழங்கப்பட்டு கடந்த 10 நாட்களாக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகிறார்.
ஜெயலலிதாவினுடைய வழக்கறிஞர்கள் அவரை ஜாமீனில் எடுப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். அ.இ.அ..திமு.க ஆட்சியில் இருக்கின்ற ஒரே காரணத்தினால் இந்த வழக்கினுடைய உண்மை தன்மை மக்களுக்கு சென்றடைய விடாமல் தடுத்திடும் வண்ணம் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அ.இ.அ.தி.மு.க வினர் போராட்டமென்பது ஒரு கட்சியினுடைய தலைமைக்கு தொண்டர்கள் காட்டுகின்ற விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது என எடுத்துக்கொள்ளலாம்.ஆனால் கடந்த சில நாட்களாக சில ஆபத்தான போக்குகள் உருவாகி வருகின்றன. இதுதான் கவனத்திற்குரியது.
மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பள்ளி மாணவர்கள்,கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுநல அமைப்பு சார்ந்தவர்ளை வைத்து மனிதசங்கிலி,பேரணி,உண்ணாவிரதம்,துண்டு பிரசுரம் மூலம் பரப்புரை செய்வதைப்போல நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பாக களமிறக்கி விடப்படுகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு திரைப்படத் துறையினர் உண்ணாவிரதம்,மீனவர்கள் உண்ணாவிரதம் எனத் தொடங்கி இன்று தமிழகம் தழுவிய தனியார் பேருந்துகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது என்கிறார்கள்.
7ம் தேதி 4500 தனியார் பள்ளிகளும், தனியார் கல்லூரிகளும் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் உருவாகியுள்ள ஒரு ஆபத்தான போக்காகும். இது ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கும் பெரும் பாதகத்தை உருவாக்கும்.
எஞ்சியிருக்கக்கூடிய ஒன்றரை ஆண்டு காலம் அரசினுடைய தயவு இருக்க வேண்டுமென்ற நோக்கத்திற்காக இருட்டறையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகளுக்கு தனியார் மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் அச்சத்தோடு அடி பணிவதாகத் தெரிகிறது.இந்த நிலை நீடிக்க அனுமதிக்கப்பட்டால் உலகின் எந்த மூலை முடுக்கிலும் எந்த ஒரு மனித இனமும் நிம்மதியாக வாழ முடியாது.
உலகளவில் அறியப்பட்ட ஃபாசிச வாதிகளான ஹிட்லர்-முசோலினி ஆட்சியில் கூட இது போன்ற சம்பவங்கள் நடந்ததாக வரலாறு இல்லை.எனவே தமிழகத்தில் ஜெயலலிதா தண்டனைக்குள்ளான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் ஃபாசிச நடவடிக்கைகள் அனைத்திற்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழக ஆளுநர் தனது பிரத்யேக அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். மத்திய அரசு எல்லாம் காலம் கடந்து செல்வதற்கு முன்பாக உரிய முறையில் தலையிட்டு சட்டம்-ஒழுங்கையும்,நீதியையும் நிலைநாட்ட வேண்டுமென்று புதிய தமிழகம் கட்சி கேட்டுக் கொள்கிறது.
எக்காரணத்தைக் கொண்டும் ஜெயலலிதாவின் தண்டனையை அரசியலாக்கி ஆதாயம் தேடும் வகையில் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்துகள்,ஆம்னி பேருந்துகள் போன்றவைகள் உட்பட பிற அமைப்புகளும்,தொழில் நிறுவனங்களும் வேலை நிறுத்தம் செய்ய அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.