ராம்குமார் உடலை பார்க்க டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அனுமதி மறுப்பு… போலீசார் கெடுபிடி
சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள ராம்குமாரின் உடலை பார்க்க வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ராம்குமாரின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டு வழக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ளது.
இந்நிலையில், இன்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ராம்குமார் உடலை பார்க்க போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளார். ராம்குமாரின் உடலை பார்க்க கிருஷ்ணசாமிக்கு அனுமதி கிடையாது என்று மறுத்துள்ள போலீசார், பெற்றோர்கள் தவிர வேறு யாருக்கும் ராம்குமாரின் உடலை பார்க்க அனுமதிக்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இதனிடையே, ராம்குமாரின் மரணத்தில் மர்மம் நிலவி வருவதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.