பெரும்பான்மையை இழந்த அரசு, மௌனம் காக்கும் ஆளுநர்...இப்போது என்ன காரணமோ? நமது எம்ஜிஆர் கேள்வி!
சசிகலா ஆட்சியமைக்க ஆளுநர் தாமதம் செய்த போது வழக்கு காரணமாக சொல்லப்பட்டது ஆனால் இன்று எந்த வழக்கிற்காக காத்திருக்கிறார் என்று நமது எம்ஜிஆர் கேள்வி கேட்டுள்ளது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது பெரும்பான்மை இழந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடாமல் ஆளுநர் மௌனம் காப்பது எந்த வழக்கிற்காக என்று டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேட்டில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதிமுகவின் இரு அணிகள் இணைந்த நிலையில் முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், அவர் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டதாகவும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தனித்தனியே கடிதம் தந்தனர். இதனால் முதல்வர் பழனிசாமியின் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேலும் எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்துள்ளதால் சட்டரீதியாக பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். ஒரு வேளை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டால் தங்கள் தரப்பில் இருக்கும் ஆதரவு எம்எல்ஏக்களை தக்க வைத்துக் கொள்ள தினகரன் 19 எம்எல்ஏக்களை புதுச்சேரியில் தி விண்ட் ஃப்ளவர் ரெசார்ட்டில் தங்க வைத்துள்ளார்.
சந்தேகம் தான்
ஆனால் தகுந்த முன்னேற்பாடுகளுடன் தினகரன் இருக்க ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் நேற்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு கடிதம் அளித்த சில நிமிடங்களில் தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அமைச்சர் ஜெயக்குமாரின் துறைகள் கூடுதல் இலாக்காக்களாக ஒதுக்கப்பட்டன.
கடுப்பான தினகரன் அணி
எனவே தமிழக ஆட்சியில் தற்போதைக்கு எந்த மாற்றத்தையும் ஆளுநர் அறிவிக்க மாட்டார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இது ஒரு புறமிருக்க எம்எல்ஏக்கள் எதிர்ப்பு கடிதம் கொடுத்தும் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடாதது ஏன் என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆரில் கட்டுரை பிரசுரமாகியுள்ளது.
மௌனம் ஏனோ?
அந்தக் கட்டுரையில், அன்று ( பிப்ரவரி) ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது வழக்கின் தீர்ப்பு வர இருக்கிறது. என்றும் அதனால் ஆளுநர் தாமதம்
செய்வது சரியானது என்றும் வாதிட்டோர் இன்று பெரும்பான்மையை இழந்த எடப்பாடி அரசு மீது பெரும்பான்மையை நிரூபிக்க சொல்லாமல் மௌனமாக இருப்பதற்கு எந்த வழக்கை காரணமாக சொல்வார்களோ?
எந்த வழக்கும் இல்லையே
பெரும்பான்மையை நிரூபிக்க காலம் தாழ்த்துவதற்கு உதாரணமாக எந்த வழக்கும் இருப்பதாக நமக்கு தெரியவில்லை. காரணம் கற்பிப்பவர்களுக்கு
தெரியுமோ என்னவோ? என்று அட்டைச் செய்தியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. நமது எம்ஜிஆர், ஜெயா தொலைக்காட்சி இன்னும் தினகரன் அணி வசமே இருப்பதால் ஆட்சியும், கட்சியும் ஈபிஎஸ், ஓபிஎஸ் வசம் இருந்தாலும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகங்கள் தினகரனுக்கு ஆதரவாகவே செய்திகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.