ஐரோப்பிய நிறுவனத்திடம் லஞ்சம் கேட்ட தமிழக மூத்த அமைச்சர்.. ராமதாஸ் கிளப்பும் புதுப் புயல்
தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க வந்த ஐரோப்பிய நிறுவனத்திடம் மூத்த அமைச்சர் ஒருவர் லஞ்சம் கேட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை : ஐரோப்பிய தொழில் நிறுவனத்திடம் லஞ்சம் கேட்ட மூத்த தமிழக அமைச்சர் விரைவில் நெருக்கடியில் சிக்க உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கொரியாவைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் நிலையில், அதன் துணை நிறுவனமான கியா இந்தியாவில் தொழில் தொடங்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது. இதற்காக தமிழக அரசுடன் பேசுசவார்த்தை நடத்தி 390 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்க அந்த நிறுவனம் ஒப்புகொண்டு அது சட்டசபையிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மூத்த அமைச்சர் ஒருவர் இந்த ஆலை தமிழகத்தில் அமைய நிலத்திற்கான அதிகாரப்பூர்வ விலையைவிட 50 சதவீதம் கூடுதலாக கொடுக்க வேண்டும் என்பதோடு, வரி சலுகை, மின்கட்டண சலுகை உள்ளிட்டவற்றிற்கு தனியாக பெருந்தொகை தர வேண்டும் என்று கோரியதாக கியா நிறுவன தமிழக ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் ஊழல் பேரத்தை பார்த்து பதறிப்போன கியா நிறுவனம் டெல்லியில் உள்ள தங்கள் நாட்டு தூதரகத்தில் புகார் அளித்ததோடு, தொழிற்சாலையை அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு மாற்றி விட்டது. அமைச்சரின் இந்த ஊழல் பேரம் மூலம் தமிழகத்தில் அமைய இருந்த தொழிற்சாலை வேறு மாநிலத்திற்கு மாறியதால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போனதோடு, தமிழகத்தின் மானம் கப்பலேறிவிட்டது.