ஒரு ஓட்டுக்கு ரூ. 8000 தரப் போகிறார்கள்.. ஆர்.கே.நகர் குறித்து எச்சரிக்கும் ராமதாஸ்!
தென்காசி: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பண பலத்தை பெருமளவு பிரயோகிக்கிறது அதிமுக. ஒரு ஓட்டுக்கு ரூ. 8000 கொடுக்க திட்டமிட்டுள்ளனர் ஆட்சியாளர்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
தென்காசி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இதற்கு முன்பு தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெற்ற எல்லா இடங்களிலும் நடைபெற்ற பார்முலாவே பின்பற்றப்பட உள்ளது.
திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு 1 ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் தந்தார்கள். ஸ்ரீரங்கத்தில் ரூ.6 ஆயிரமாக அது உயர்ந்தது. இப்போது ஆர்.கே. நகரில் ரூ.8,000 தரப் போகிறார்களாம். முதல் கட்டமாக ரூ.3 ஆயிரம், பிரியாணி, மதுபாட்டில் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், முதல்வர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்து தனித்து போட்டியிடுவதை துணிச்சலாக கூறிய கட்சி பா.ம.க. மட்டுமே.
தி.மு.க., அ.தி.மு.கவால் எந்த வளர்ச்சியும் இல்லை. இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். சாராயத்தை கொடுத்து இளைஞர்களை குடிகாரர்களாக்கி உள்ளனர்.
வட மாவட்டங்களில் தான் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது. தென் மாவட்டங்களில் இல்லை என்கிறார்கள். 1994ம் ஆண்டிலேயே தென்காசியில் போராட்டம் நடத்தி உள்ளோம். நெல்லை மாவட்டத்தில் அதிகமான கிராமங்களில் நான் கொடிஏற்றி உள்ளேன். என்னை போல் போராட்டம் நடத்திய தலைவர்கள் தமிழகத்தில் யாரும் இல்லை. தவறுதலாக அதிமுக. மற்றும் திமுக உடன் கூட்டணி வைத்துவிட்டோம். அதற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டோம் என்றார் ராமதாஸ்.