தருண் விஜயின் இனவெறிப்பேச்சு.. மன்னிப்பு கேட்பதால் மட்டும் மனஅழுக்கு விலகுவதில்லை... ராமதாஸ் கண்டனம்
பாஜக தலைவர் தருண் விஜய் இனவெறி பேச்சுக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மன்னிப்பு கேட்டால் மட்டும் மனஅழுக்கு விலகுவதில்லை என்று பாமக தலைவர் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: கென்ய நாட்டை சேர்ந்த இளைஞர் இந்தியாவில் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அளித்த பேட்டியொன்றில், தென் இந்தியாவில் கறுப்பு நிறம் கொண்டவர்களிடம் நாங்கள் விரோதம் பாராட்டவில்லையே என்று திமிர்தனமாக தருண் விஜய் பேசி தமிழர்களிடம் நன்றாக மாட்டிக் கொண்டார்.
இதற்கு பெரிய அளவில் தென்னிந்தியாவைச் சேர்ந்த தங்களது கண்டனத்தை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் தருண் விஜயை வறுத்தெடுத்து வருகின்றனர்.
கடும் எதிர்ப்பை தாங்க முடியாத தருண் விஜய், தனது பேச்சு புண்படுத்திவிட்டதாக நினைப்பவர்களுக்கு தனது மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பம்மாத்து மன்னிப்பை ஒப்புக்கு கேட்டு வைத்தார்.
தருண் விஜய் மன்னிப்புக் கேட்டாலும் இன்னும் இரண்டு நாட்களுக்கு வச்சி செய்வோம் என்று சமூக வலைதளங்களில் ஆக்ரோஷமாக பலர் பதிவிட்டு வருகின்றனர்.
தென்னிந்தியர் கருப்பர்கள் என்ற தருண் விஜயின் இனவெறிப் பேச்சு கண்டிக்கத்தக்கது. மன்னிப்பு கேட்பதால் மட்டும் மன அழுக்கு விலகுவதில்லை!
— Dr S RAMADOSS (@drramadoss) April 8, 2017
இந்நிலையில், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தருண் விஜயை கடுமையாக கண்டித்து பதிவிட்டுள்ளார். அதில், "தென்னிந்தியர் கருப்பர்கள் என்ற தருண் விஜயின் இனவெறிப் பேச்சு கண்டிக்கத்தக்கது. மன்னிப்பு கேட்பதால் மட்டும் மன அழுக்கு விலகுவதில்லை!" என்று ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.