மனோரமாவைத் தவிர்த்து விட்டு தமிழ் சினிமா வரலாற்றை எழுத முடியாது.. டாக்டர் ராமதாஸ்
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாகேஷ் என நான் ரசித்த ஒரு சில கலைஞர்களில் நடிகை மனோரமாவும் ஒருவர். அவரைத் தவிர்த்து விட்டு தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுத முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ் திரையுலகில் ஆச்சி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட நடிகை மனோரமா உடல் நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
தமிழ் திரையுலகின் வரலாற்றை நடிகை மனோரமாவைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது. அந்த அளவுக்கு தமிழ் திரையுலகுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்திருந்தவர்.
மாணவியாக இருந்த போதே மேடை நாடகங்களில் நடித்து கலைப்பயணத்தைத் தொடங்கிய மனோரமா, பின்னர் திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். தமிழில் 3 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து 1500&க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நகைச்சுவை பாத்திரமாக இருந்தாலும், குணச்சித்திர வேடமாக இருந்தாலும் அந்த பத்திரமாகவே மாறிவிடுபவர் நடிகை மனோரமா. தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாகேஷ் என நான் ரசித்த ஒரு சில கலைஞர்களில் நடிகை மனோரமாவும் ஒருவர்.
தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை அவர் வென்றிருக்கும் போதிலும், தமிழ் திரைப்பட ரசிகர்களின் உள்ளங்களில் என்றென்றும் அவருக்கு தனி இடம் உண்டு என்பது தான் அவரது திறமைக்கு அடையாளம் ஆகும்.
நடிகை மனோரமாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தமிழ் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.