சரியாகத்தானே பேசுகிறார் பிரகாஷ் ராஜ்... டாக்டர் ராமதாஸ்
நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியது மிகவும் சரி என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் நாட்டுக்கு பேரழிவு என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பது மிகவும் சரி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் இந்த முடிவை பல்வேறு நடிகர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் நடிகர் பிரகாஷ் ராஜ் அதை எதிர்த்துள்ளார்.
பெங்களூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் கூறுகையில், நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது. திரைப்பட நடிகர்கள் கட்சித் தலைவர்களாவது நாட்டுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்படும்.
அரசியலுக்கு வரக் கூடாது
நடிகர்கள் அரசியல் கட்சியில் சேருவதையும் விரும்பவில்லை. கமல்ஹாசன் தொடங்கும் கட்சியில் நான் ஒருபோதும் சேரப்போவதில்லை. நடிகர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நடிகர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அரசியலுக்கு வரக்கூடாது என்ற கூறியிருந்தார்.
பெரும் சர்ச்சை
இவரது கருத்து கட்சி ஆரம்பிப்பதற்கான ஆயத்த பணிகளில் உள்ள ரஜினி,கமல் ஆகியோருக்கும் இனி வருவதற்கு ஆழம் பார்த்து வரும் சிலருக்கும் பொருந்தும் என்பதால் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரகாஷ் ராஜ் விளக்கம்
பின்னர் தான் கூறியதை ஊடகங்கள் திரித்து கூறிவிட்டதாக பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜின் இந்த கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
|
மிகச் சரி என விளக்கம்
அவரது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், நடிகர்கள் தலைவரானால் நாட்டிற்கு பேரழிவு: பிரகாஷ்ராஜ் - தமிழ்நாட்டின் கடந்த 50 ஆண்டு கால அனுபவத்தை தானே சொல்கிறார்... சரி தான்! என்று கூறியுள்ளார். நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு ராமதாஸும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
|
சமூகப் பணிக்கு ராமதாஸ் ஆதரவு
அதேசமயம், நடிகர்களின் சமூகப் பணிக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவு தெரிவிப்பதில் முதல் தலைவராக இருக்கிறார். விஜய் சேதுபதியின் செயலுக்கு அவர் பாராட்டு தெரிவித்து டிவீட் போட்டது நினைவிருக்கலாம்.