நீட் தேர்வில் அலட்சியம் வேண்டாம்... குழப்பங்களுக்கு முடிவு கட்ட ராமதாஸ் கோரிக்கை
நீட் தேர்வில் அலட்சியம் காட்டாமல் அதில் உள்ள குழப்பங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை: மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான தகுதி தேர்வான 'நீட்'டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசு மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளது. என்றாலும் அது இன்னும் சட்டமாகவில்லை என்பதால் நீட் தேர்விற்கான குழப்பங்கள் மாணவர்களிடையே நிலவி வருகிறது.
இந்தக் குழப்பத்தை உடனடியாக நீக்க தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.
மசோதாவை சட்டமாக்க தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்று இதற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வில் குழப்பம்
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்த குழப்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பம் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். கடந்த ஆண்டு தமிழகத்திலிருந்து சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு அதை விட சற்று அதிக எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை அரசு பெற்று விடும் என்ற நம்பிக்கை தான் இதற்கு முக்கியக் காரணமாகும்.
ஜனாதிபதி ஒப்புதல்
ஆனால், கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் சட்டத்திற்கு இன்று வரை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படவில்லை. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படவில்லை என்றால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாது. விண்ணப்பித்த மாணவர்களிலும் எத்தனை பேர் தகுதி பெறுவார்கள் என்பது தெரியாது.
ஏமாற்றம்
எனவே நீட் சட்டத்திற்கு விரைவாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இதுதொடர்பாக பிரதமரிடம் மனு கொடுக்கப்பட்டு விட்டது; அதனால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்து விடும் என முதல்வர் பழனிச்சாமி கூறியிருப்பது அவரையும் ஏமாற்றிக் கொண்டு மாணவர்களையும் ஏமாற்றும் செயலாகும்.
அலட்சிய அரசு
தமிழக அரசு நிறைவேற்றியுள்ள நீட் தேர்வு விலக்கு சட்டம் மத்திய அரசின் நீட் தேர்வு சட்டத்திற்கு முற்றிலும் முரணான ஒன்று என்பதால், மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுப்பதன் மூலம் மட்டுமே அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முடியும். எனவே, இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டக் கூடாது. தமிழக அரசின் பள்ளிக்கல்வி, சுகாதாரம், சட்டம் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் அடங்கிய குழுவை உடனடியாக தில்லிக்கு அனுப்பி சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களையும், குடியரசுத் தலைவரையும் சந்தித்து நீட் தேர்வு விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்படி அரசு வலியுறுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.