நோபல் பரிசு பெற்ற சத்யார்த்தி, மலாலாவுக்கு ராமதாஸ் வாழ்த்து
சென்னை: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி மற்றும் மாலாலாவுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:
''நடப்பாண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்காக இந்தியர் கைலாஷ் சத்யார்த்தியும், பாகிஸ்தானின் மலாலாவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
குழந்தைகள் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடிவரும் இருவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த எனது நண்பரான கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் நலனுக்காகவும், கல்விக்காகவும் போராடி வருபவர். இதற்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார்.
சேவை இயக்கம்
1990களின் தொடக்கத்தில் ‘இளமையைக் காப்பாற்றும் இயக்கம்' என்ற பெயரில் சேவை அமைப்பைத் தொடக்கி குழந்தைகளின் உரிமைக்காக போராடத் தொடங்கிய சத்யார்த்தி இன்று வரை தமது அமைப்பின் மூலம் சுமார் ஒரு லட்சம் குழந்தைகளை பல்வேறு வகையான அடிமைத்தளைகளில் இருந்து மீட்டு அவர்களை சமூகத்துடன் ஒருங்கிணைத்தது, மறுவாழ்வு பெற்றுத்தந்தது, கல்வி கற்க வைத்தது என பல்வேறு சேவைகளை செய்திருக்கிறார்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து ஏராளமான இயக்கங்களை நடத்தி வருகிறார்.
சர்வதேச விருது வென்றவர்
1998ஆம் ஆண்டில் குழந்தைகள் உரிமைகளுக்கான உலகப் பேரணியை பல்வேறு நாடுகள் வழியாக அவர் நடத்தினார். அப்பேரணி சென்னையைக் கடந்த போது, அவரது அழைப்பின் பேரில் பேரணியில் சிறப்பு விருந்தினராக நான் கலந்து கொண்டேன். அதன்பின், 2003 ஆம் ஆண்டில் பசுமைத்தாயகம் மற்றும் அமைதி அறக்கட்டளை சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட குழந்தைகள் உரிமை மாநாட்டில் எனது அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக சத்யார்த்தி கலந்து கொண்டார். இதுவரை ஏராளமான சர்வதேச விருதுகளை வென்ற சத்யார்த்திக்கு நோபல் பரிசு சிறந்த அங்கீகாரமாக அமையும்.
மலாலாவுக்கு வாழ்த்து
பாகிஸ்தானை சேர்ந்த மலாலா தலிபான் தீவிரவாதிகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பெண்களின் கல்விக்காக போராடியவர். இதற்காக தலிபான்கள் சுட்ட துப்பாக்கி குண்டுகளை தனது தலையில் வாங்கி போராடி உயிர் பிழைத்தவர். தொடர்ந்து பெண் கல்விக்காக பாடுபட்டு வருபவர்.
குழந்தைகளின் தெய்வங்கள்
நடப்பாண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற இவர்கள் இருவரைத் தவிர சிறந்தவர்கள் வேறு எவரும் இல்லை என்றே கருதுகிறேன். நோபல் பரிசு பெற்றுள்ள சத்யார்த்தி, மலாலா ஆகிய இருவரும் தங்களின் துறையில் மேலும் பல சேவைகளை செய்து, உலகம் முழுவதும் பெண் குழந்தைகள் தெய்வங்களாக போற்றப்படும் நிலையை உருவாக்க பாடுபட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்'' எனக் கூறியுள்ளார்.