தமிழக மாணவர்களின் கொலைகளமான டெல்லி... சிபிஐ விசாரணை கோரும் ரவீந்திரநாத்!
தமிழக மருத்துவ மாணவர்களின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மருத்துவ சங்கத்தலைவர் ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
சென்னை : தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களில் மருத்துவ உயர் படிப்பு பயில செல்லக் கூடாது என்று திட்டமிட்டே மாணவர்களின் மர்ம மரணங்கள் அரங்கேறுவதாக மருத்துவ சங்கத் தலைவர் ரவீந்திரநாத் குற்றம்சாட்டியுள்ளார்.
சமூக சமத்ததுவத்திற்கான மருத்துவர் சங்கத் தலைவர் ரவீந்திரநாத் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : தமிழக மாணவர்களின் மர்ம மரணங்கள் திட்டமிட்டே நடத்தப்படுவதாக தெரிகிறது. ஏனெனில் வேறு மாநிலங்களுக்கு சென்று படிப்பவர்களும், அகில இந்திய மருத்துவ கல்லூரிகளில் படிப்பவர்களும் நிச்சயமாக அச்சப்படுவார்கள் என்பதே இதன் நோக்கமாக தெரிகிறது.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. இப்போது தமிழக மாணவர்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்று மருத்துவ சீட் பெறக் கூடாது என்ற நோக்கத்துடன் தான் இது போன்ற மர்ம மரணங்கள் நடக்கிறது என்பது தான் என்னுடைய கருத்து.
அச்சுறுத்தும் டெல்லி
தமிழக டாக்டர்கள் யாரும் மருத்துவ உயர் படிப்பு படிக்கக் கூடாது, சாதி - மொழி ரீதியான பாகுபாடு, தேசிய பாகுபாடு என்று தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக மாறி இருக்கிறது. எனவே தான் டெல்லி தமிழக மாணவர்களின் கொலைக்களமாக மாறி இருக்கிறது. இதை தடுப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதிய பாகுபாடு
குஜராத்தின் அஹமதாபாத் மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் மாரிராஜ் என்ற எம்எஸ் படித்து வருகிறார். ஆனால் 3 ஆண்டுகளாக சாதிய பாகுபாடு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை பணி ஒதுக்கப்படவில்லை. எம்பிபிஎஸ் முடித்து நீட் தேர்வில் வென்றவருக்கு எப்படி திறமை இல்லாமல் போகும். திட்டமிட்டே சாதிய ரீதியாக மாரிராஜ் புறக்கணிக்கப்படுகிறார்.
அரசு முறையாக விசாரிக்கவில்லை
மாரிராஜ் தற்கொலை குறித்து அரசு அதிகாரியையோ, அல்லது காவல்துறையையோ அனுப்பி ஏன் அவர் அவமானப்படுத்தப்பட்டார். மாரிராஜிற்கான உரிமை ஏன் மறுக்கப்பட்டது என்று தமிழக அரசு கேட்கக் கூடத் தயாராக இல்லை. அவர் ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்று எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை.
சிபிஐ விசாரணையை வலியுறுத்த வேண்டும்
தமிழக மாணவர்கள் மரணத்தில் போதிய அளவில் விசாரணை நடத்தப்படாததால் குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை. சரவணன் மரணத்தில் கூட என்ன உண்மை என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்த தமிழக அரசு தயாராக இல்லை. வெளி மாநிலங்களில் பயிலும் மாணவர்கள் சாதிய பாகுபாடுகளுக்கு உள்ளாவதாகக் கூறினால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மாணவர்கள் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார்.