சவாலை ஏற்கிறேன்.. என் 1000 ஏக்கர் நிலத்தை சொல்லட்டும்.. காட்டினால் அது அவர்களுக்கே.. ராமதாஸ் அதிரடி
ஆர்எஸ் பாரதி சவாலை ஏற்பதாக டாக்டர் ராமதாஸ் ட்வீட் போட்டுள்ளார்
Recommended Video
சென்னை: "சவாலை ஏற்கிறேன்.. என்னுடைய 1000 ஏக்கர் நிலம் குறித்த விவரத்தை முதலில் சொல்லட்டும்.. அப்படி ஒரு நிலம் இருந்தால் அதை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன்!" என்று திமுகவின் சவாலை ஏற்று, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதிலடி தந்துள்ளார்.
திமுகவின் முரசொலி அலுவலகம், கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்த முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பாஜக புகார் தெரிவித்து வருகிறது.
இது தொடர்பாக, அக்கட்சியின் மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்திடம் புகார் மனு அளித்தார்.
கமல் - ரஜினி சேர்வது இருக்கட்டும்.. ஆனால் இந்த கேள்விக்கு மட்டும் பதில் இல்லையே? என்ன செய்வார்கள்?
ஆர்எஸ் பாரதி
இதனடிப்படையில், முரசொலி அறக்கட்டளைக்கு தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்தது. பின்னர், முரசொலி அலுவலக நில விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியல் இனத்தவர் ஆணைய அலுவலகத்தில் முரசொலி அறங்காவலரும், திமுக அமைப்பு செயலாளருமான ஆர்எஸ்பாரதி நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ஆதாரங்கள்
அப்போது, "முரசொலி நிலம் தொடர்பாக எங்களிடம் போதிய ஆதாரங்கள் உள்ளது. எனவே முரசொலி நில விவகாரத்தில் பட்டியலினத்தவர் தலையிட உரிமை இல்லை. புகார் அளித்த சீனிவாசன் என்பவரிடம் அதுதொடர்பான ஆதாரங்கள் இல்லை. அதனால், ஆதாரங்களைச் சமர்ப்பிக்க சீனிவாசன் ஆதாரம் கேட்டுள்ளார். இந்த விவகாரத்தில் முதன்முதலில் பொய்யுரைத்த டாக்டர் ராமதாசுக்கு சொந்தமான 1000 ஏக்கர் நிலம் குறித்த உண்மைகள் வெளியாகும்" என்று கூறியிருந்தார்.
|
மூலப்பத்திரம்
ஆர்.எஸ்.பாரதியின் சவாலை ஏற்பதாக டாக்டர் ராமதாஸ் அடுத்தடுத்து 2 ட்வீட்களை போட்டுள்ளார். அதில், "முரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை அதன் நிர்வாகம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை.மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக செய்திருக்கிறது. மிரட்டல் விடுப்பதை விடுத்து மூலப்பத்திரத்தை காட்டுங்கள். அது தான் அறம். அது தான் நேர்மை" என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.
|
சவால்
"முரசொலி விவகாரத்தில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியாத திமுக, அச்சிக்கலை எழுப்பிய மருத்துவரின் 1000 ஏக்கர் குறித்து தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளது. சவாலை ஏற்கிறேன். எனது 1000 ஏக்கர் குறித்த விவரத்தை கூறட்டும். அப்படி ஒரு நிலம் இருந்தால் அதை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன்!" என்று மற்றொரு ட்வீட்டையும் டாக்டர் பதிவிட்டுள்ளார்.
திமுக - பாமகவின் இந்த ட்விட்டர் மோதலால், ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது என்று கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.