தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் சிவசாமி காலமானார்
கோவை: தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் சிவசாமி நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.
கோவை காரமடையை அடுத்த மத்தம்பாளையத்தை சேர்ந்தவர் சிவசாமி( வயது83). தொழில்முறை டாக்டரான இவர் தமிழக விவசாயிகள் சங்க தலைவராக இருந்தார்.
கடந்த ஒரு மாத காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த, சிவசாமி நேற்று மாலை காலமானார். சிவசாமிக்கு சரோஜினி என்ற மனைவி உள்ளார். டாக்டர் சிவசாமி 19-07-1934 அன்று பிறந்தார்.
எம்பிபிஎஸ் படித்தவர்
சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்தார். பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை போன்ற கிராமப்பகுதிகளில் மருத்துவ சேவை செய்து வந்தார். தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் நாராயணசாமி நாயுடுவுடன் இணைந்து பணியாற்றினார்.
நாராயணசாமி நாயுடுவுடன்
ஒருகட்டத்தில் மருத்துவ பணியை உதறிவிட்டு விவசாயிகளின் நலனுக்காக முழுமையாக களமிறங்கினார். நாராயணசாமி நாயுடு மரணத்தை அடுத்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவரானார்.
போராட்டங்கள்
இதன்பின் விவசாயிகளுக்காக பலவிதமான போராட்டங்கள் நடத்தினார். தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைக்கும் விதத்தில் விவசாயிகளின் மின்சார கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் மாட்டு வண்டி போராட்டம் நடத்தினார்.
காலமானார்
பலமுறை சிறை சென்றுள்ளார். டாக்டர் சிவசாமி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் இன்று மாலை பிரிக்கால் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.