மது விலக்கை கொண்டு வர முடியாது என்றா கூறுவது... "நத்தம்" பேச்சு குறித்து தமிழிசை வருத்தம்
சென்னை: மது விலக்கைக் கொண்டு வர முடியாது என்று தமிழக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியிருப்பது வருத்தம் தருகிறது என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்தைச் சுற்றிலும் உள்ள மாநிலங்களில் மது விலக்கு இல்லை. எனவே தமிழகத்தில் மட்டும் மது விலக்கைக் கொண்டு வர முடியாது. மத்திய இழப்பை பகிர்ந்து கொள்ள முன்வந்தால் கொண்டு வருவது குறித்து முடிவு செய்யப்படும் என்று நத்தம் விஸ்வநாதன் கூறி விட்டார்.
இது மது விலக்கு குறித்து ஜெயலலிதா ஏதாவது சொல்வார், அறிவிப்பார் என்று எதிர்பார்த்து வந்த அப்பாவி மக்களுக்கும், மதுக் கொடுமையால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர்கள் கண்டனம்
நத்தம் விஸ்வநாதன் பேச்சுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் நத்தம் விஸ்வநாதன் பேச்சைக் கண்டித்துள்ளனர்.
தமிழிசை கண்டனம்
தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர். இவர் கண்டனம் தெரிவிக்கவில்லை. மாறாக வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழிசை கூறுகையில், தமிழகத்தில் டாஸ்மாக்கை மூடவேண்டும் என பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்து வருகிறது.
சாத்தியமில்லை என்பதா
மதுவிலக்கை அமல்படுத்த சாத்தியமில்லை என சட்டசபையில் அமைச்சர் கூறிய கருத்து வருத்தம் அளிக்கிறது. ஏமாற்றம் அளிக்கிறது. மற்ற மாநிலங்களில் மதுவிலக்கை அறிவித்தால் தமிழகத்திலும் கொண்டு வரப்படும் என கூறுவது பொறுப்பை தட்டிக்கழிப்பதாகும்.
மூட வேண்டும்
சமூக அக்கறையுடன் இளைஞர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. டாஸ்மாக்கை மூட அரசு முயற்சி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
தேர்தல் பணி தொடங்கியது
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி தேர்தல் பணியை தொடங்கிவிட்டது. வருகிற 25ம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 5ம் தேதிக்குள் 234 தொகுதிகளிலும் கட்சி தொண்டர்களை சந்திக்கும் கூட்டம் நடக்கிறது. அதன் பின்னர் விருப்ப மனு வாங்கப்படும்.
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதியாக உள்ளார்.
கவனமாக செயல்படுகிறோம்
அவசரமாக நடவடிக்கைகளை எடுத்தால் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமான தடை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றார் தமிழிசை.