"அப்பா.. உங்கள் வாழ்த்தை மனதார ஏற்கிறேன்".. தமிழிசை நெகிழ்ச்சி!
சென்னை: எனது தந்தையாகவும், பண்பட்ட அரசியல்வாதியாகவும் இருந்து எனது தந்தை என்னை வாழ்த்தியுள்ளதை மனதார ஏற்றுக் கொள்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
பல்வேறு அரசியல் கட்சியினரும் தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேபோல அவரது தந்தையும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தனும் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தியுள்ளார்.
அதேசமயம் தமிழிசையின் சித்தப்பாவும், தமிழக வர்த்தக காங்கிரஸ் தலைவருமான வசந்தகுமார் வாழ்த்து தெரிவிக்கவில்லை. மாறாக பாஜக எனது எதிரிக் கட்சி என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அளித்துள்ள ஒரு பேட்டியில் தமிழிசை தெரிவித்த கருத்துக்கள்...
அப்பா வாழ்த்தை ஏற்கிறேன்
என் தந்தையாகவும், பண்பட்ட அரசியல்வாதியாகவும் இருந்து வாழ்த்தி உள்ள குமரிஅனந்தன் வாழ்த்தை ‘‘மனமார ஏற்றுக் கொள்கிறேன்''.
நான் காங்கிரஸ் தலைவரின் மகள்
நான் காங்கிரஸ் குடும்பத்தில் காங்கிரஸ் தலைவரின் மகளாகத் தான் வளர்ந்தேன். நான் மருத்துவ துறையில் பணியில் ஈடுபட்டபோது பல நாடுகளுக்கு சென்றேன்.
உணர்ந்துதான் பாஜகவுக்கு வந்தேன்
50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதை உணர்ந்த பிறகுதான் பாரதீய ஜனதாவில் சேர்ந்தேன்.
மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் கட்சி
பாரதீய ஜனதா தேசத்தின் மீதும், மக்கள் நலன் மீதும் அக்கறை செலுத்தும் கட்சி. எனவே தான் மக்கள் இமாலய வெற்றியை கொடுத்துள்ளார்கள்.
மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு
கட்சி என் மீது நம்பிக்கை வைத்து வழங்கி உள்ள இந்த பதவியை நான் ஒரு பொறுப்பாகவே உணர்கிறேன். மக்களுக்கு சேவை செய்யும் ஒரு பொறுப்பை வழங்கி இருக்கிறார்கள்.
சரித்திரம் படைப்பேன்.. சாதிப்பேன்
மேடை பலவாக இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். தலைவர்கள் பலர் உருவாவார்கள். எல்லா தலைவர்களும் ஒரு சரித்திரத்தை பதிய வைத்து தான் செல்வார்கள். அதே போல் நானும் மக்கள் பணியில் சாதிப்பேன். சாதிக்க முடியும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் தமிழிசை.