சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகிறது தேர்தல் ஆணையம்... வரும் 15ல் வரைவு வாக்காளர்பட்டியல் வெளியீடு
சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 15ம் தேதி வெளியிடப்படும் என்று தலைமை செயலகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
வருகிற 15ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தலுக்கான மனு அளிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் நவம்பர் 1ம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தலைமையில் அனைத்து கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
2016 சட்டசபை தேர்தல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக சார்பில் சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், இணை செயலாளர் பரந்தாமன், அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், தேமுதிக சார்பில் செந்தாமரை கண்ணன், சிபிஎம் சார்பில் பாக்கிய ரமணி, காங்கிரஸ் சார்பில் தணிகாச்சலம், பாஜ சார்பில் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்திப் சக்சேனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், வரும் 15ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதேபோல, elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியலின் நகல்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருக்கும் வழங்கப்படும்.
தமிழகத்தில் கடந்த 5.1.2015 ஐ அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 5.62 கோடியாகும். அதன்பிறகு நடைபெற்ற பல்வேறு சிறப்பு முகாம்களின் மூலம் 4.20 லட்சம் புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். 5.05 லட்சம் வாக்காளர்கள் இடம் மாற்றம் குறித்து மாற்றம் செய்துள்ளனர்.
அதேபோல, வாக்காளர் இறப்பு, இரட்டை வாக்காளர் பதிவு போன்ற காரணங்களுக்காக 3.15 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு முகாம்களுக்கு பிறகு தற்போதைய தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5.68 கோடியாகும். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் வரும் 20ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 4ம் தேதி ஞாயிற்றுகிழமைகளில் தமிழகம் முழுவதும் நடைபெறும்.
பெயர் சேர்க்க விரும்பும் குடிமகன்கள் தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் 28,850 இடங்களில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.