கைது செய்... கைது செய்... எஸ்வி சேகரை கைது செய்... சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை
எஸ்வி சேகரை கைது செய்ய கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை திவிகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை: எஸ்.வி. சேகரை கைது செய்ய கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை திராவிடர் விடுதலை கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெண் நிருபர்கள் குறித்து தவறான கருத்துகளை எஸ் வி. சேகர் தனது முகநூலில் பதிவு செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அவர் தனது கருத்தை நீக்கியதுடன் வருத்தம் தெரிவித்தார்.
எனினும் இதை பத்திரிகையாளர்கள் ஏற்கவில்லை.பெண்களை இழிவாக பேசிய எஸ் வி சேகரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் தனக்கு முன்ஜாமீன் கோரி எஸ் வி சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை நிராகரித்த நீதிபதி ராமதிலகம், எஸ் வி சேகரை சரமாரி கேள்விகளை எழுப்பி திக்கு முக்காட செய்தார். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை எஸ்வி சேகரை கைது செய்யவில்லை. அவரும் 20 நாட்களுக்கு மேல் தலைமறைவாகவே உள்ளார்.
இந்நிலையில் எஸ்வி சேகரை கைது செய்யாததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகையிட்ட திவிகவினர் போராட்டம் நடத்தினர்.