கொலை, கொள்ளை வழக்கில் சிக்கிய தளி ராமச்சந்திரனுக்கு மீண்டும் சீட்- இ.கம்யூவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
சென்னை: கொலை, கொள்ளை வழக்கில் சிக்கிய தளி தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ. ராமச்சந்திரனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது முதல் ஏகப்பட்ட சர்ச்சைகள்.
எளிமையான எம்.எல்.ஏ. என பெயரெடுத்த திண்டுக்கல் தொகுதி பாலபாரதிக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. இது மிக கடுமையான விவாதங்களை உருவாக்கப் போய், பாலபாரதியோ நானும் இந்த முடிவை எடுக்கும் போது உடனிருந்தேன்... கட்சி விதிகள் அப்படித்தான் என சமாளித்தார்.
தியாகு கோரிக்கை
அதேபோல் மிக மோசமான நபராக, குண்டர் சடத்தில் கைதான, கொலை, கிரானைட் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய தளி ராமச்சந்திரனுக்கு எப்படி மீண்டும் சீட் கொடுக்கலாம் கம்யூனிஸ்டுகள் என ஏகத்துக்கும் பலரும் கொந்தளித்து போயுள்ளனர். பெரியார் திராவிடர் கழக நிர்வாகியாக இருந்த பழனியை சுட்டுக் கொன்று தலையை வெட்டி எடுத்தவர் தளி ராமச்சந்திரன் என்ற குற்றச்சாட்டும் உண்டு; கிரானைட் கொள்ளையில் தொடர்பும் உண்டு; ஆகையால் அவரை வேட்பாளராக அறிவித்ததை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியவாதி தோழர் தியாகு சென்னையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தார்.
'மாற்று அரசியல்' 'ஊழல் ஒழிப்பு' என பேசுகிற இடதுசாரிகளே இத்தகைய குற்றச்சாட்டுக்குள்ளான நபருக்கு எப்படி மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கலாம் என்ற கொந்தளிப்பு சமூக வலைதளங்களில் வெடித்து கிளம்பிக் கொண்டிருக்கிறது. அத்தகைய சில பதிவுகள்:
தில் இருக்கிறதா விஜயகாந்துக்கு?
மூத்த பத்திரிகையாளர் கதிர்வேல் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தளி ராமச்சந்திரனுக்கு சீட் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். தில் இருக்கிறதா? விஜயகாந்துக்கு என ஆவேசத்துடன் போட்ட பதிவு இது.
அசிங்கம்..
பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தளி ராமச்சந்திரனை வேட்பாளராக்கியது அசிங்கம் என வசைபாடியிருக்கிறார்.
வெல்லட்டும் ம.ந.கூ.
சமூக செயற்பாட்டாளராக வீரமணி பன்னீர்செல்வம், பெரியார் தி.க.வின் மாவட்ட செயலர் பழனியை தளி ராமச்சந்திரன் கொலை செய்த நிகழ்வு பற்றி விரிவாக பதிவிட்டு இப்படிப்பட்ட ஒருநபரை வேட்பாளராக்கிய மக்கள் நலக் கூட்டணி வெல்லட்டும் என சாடியுள்ளார்.
நீங்க எப்படி கம்யூனிஸ்ட்?
தளி ராமச்சந்திரன் மாதிரி அடியாட்கள் எல்லாம் வேட்பாளராகக் கூடாதுன்னு சின்ன போராட்டம் கூட நடத்தாதவங்க எப்படி கம்யூனிஸ்டா இருக்க முடியும்? என்கிறார் நாச்சியாள் சுகந்தி.
இப்படியான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டே இருக்கிறது.