நாத்திகம்தான் நல்லது.. ஆன்மீக அரசியல் போலியானது.. ரஜினியை தாக்கும் வீரமணி
ஆன்மீக அரசியல் என்பது போலியானது என்று குறிப்பிட்டுள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்த வார்த்தைகள் ஏமாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
திருச்சி: உலக நாத்திகர் மாநாட்டில் பேசிய திராவிடர் கழக தலைவர் வீரமணி, ஆன்மா, ஆன்மீகம் இவை அனைத்தும் போலியானவை என்றும் ஆன்மீக அரசியல் என்று ஒன்று இல்லை என்று குறிப்பிட்டார்.
திருச்சியில் உள்ள மணியம்மை பள்ளி வளாகத்தில் திராவிடர் கழகம் சார்பாக உலக நாத்திகர் மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழகத்தில் ஆன்மீக அரசியல் நடத்தப்படும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். உண்மையில் அந்த மாதிரி ஒன்று இல்லவே இல்லை. ஆன்மா, ஆன்மீகம் இவை அனைத்தும் போலியானவை, ஏமாற்றுவதற்காகவே இந்த வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
உணர்வுகளை உருவாக்கும் ஆன்மா கூடு விட்டு கூடுபாயுமாம். இதேபோல தான் தற்போது கூடு விட்டு கூடு பாய்ந்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே ஆன்மா என்றாலே பித்தலாட்டம் தான் என்றார். மேலும் பேசிய அவர், இந்த மாநாடு கடவுள் மறுப்பிற்கு மட்டுமின்றி, சமூகத்தில் சாதி மத வேறுபாடுகளை களைய வேண்டும் என்பதற்காகவும் தான் என்றார்.
மனித குலத்தை சட்டப்படி மீட்டு எடுக்க இருக்கும் ஒரே நம்பிக்கை நாத்திகம் தான் என்று கூறிய அவர், விரைவில் அனைவரும் இதனை உணர்வார்கள் என்றார். இந்த கூட்டத்தில் ஆ.ராசா, சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.