2ஜி வழக்கு தீர்ப்பு பின் கருணாநிதியை சந்தித்த கி.வீரமணி,வைரமுத்து நெகிழ்ச்சி
2ஜி வழக்கின் தீர்ப்புக்கு பிறகு கி.வீரமணி, வைரமுத்து ஆகியோர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
சென்னை : 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியானதையொட்டி நேற்று மாலை கோபாலபுரத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இருந்த 2ஜி வழக்கின் தீர்ப்பு நேற்று காலை வெளியானது. சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அளித்த தீர்ப்பின் படி, போதிய ஆதாரங்களை எதிர்தரப்பு சமர்பிக்காதததால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, ராஜ்யசபா எம்.பி கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவித்தார்.
இந்த தீர்ப்பால் தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்து கொண்டாடி வருகின்றனர். பல்வேறு தலைவர்களும் இந்த தீர்ப்பை வரவேற்று தி.மு.க.,விற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கோபாலபுரத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கி.வீரமணி, திராவிடர் இயக்கத்தை அழிக்க நினைத்தவர்களை தோல்வியடைய செய்து இருக்கிறது இந்த தீர்ப்பு. நெருப்பாற்றில் நீந்தி, பல்வேறு இன்னல்களை சந்தித்த இயக்கத்திற்கு இது இன்னொரு அனுபவம் அவ்வுளவு தான் என்று குறிப்பிட்டார். மேலும், கருணாநிதியிடம் இதைப்பற்றி பேசும்போது அவர் மிகுந்த உற்சாகம் அடைந்ததாகவும், வெற்றிவிழாவிற்கு போகலாமா என்று கேட்டதற்கு, எப்போ விழா? என்று அவர் கேட்டதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
கவிஞர் வைரமுத்து பேசுகையில், இந்த தீர்ப்பால் திராவிட, தமிழ் சமூகத்துக்கு மேல் இருந்த இழுக்கு நீங்கி உள்ளது. இந்த தீர்ப்பு நாளைய மாபெரும் வெற்றிக்கு ஆரம்பம் என்று குறிப்பிட்டார். மேலும், தான் தீர்ப்பு பற்றி உருக்கமாக பேசிக்கொண்டு இருந்த போது, தனது கையை பிடித்து இருந்த கருணாநிதி அதை இறுக்கமாக பற்றிக்கொண்டதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.