பா.ஜ.க அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! - சிறைவாசலில் தி.கவினருக்கு உற்சாக வரவேற்பு
சென்னை: கோவை பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வந்தவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர் பெரியார் தி.க தொண்டர்கள்.
' ஜாமீன் பெறுவதற்காக கடந்த 86 நாட்களாகப் போராடினோம். நேற்றுதான் கிடைத்தது' என்கின்றனர் பெரியார் தி.கவினர். காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வி.கே.கே.மேனன் ரோட்டில் பா.ஜ.க மாவட்ட அலுவலகம் அமைந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுச் சென்றனர்.
2 பேர் குண்டு வீச்சு
அந்தக் குண்டு, பா.ஜ.க அலுவலகத்தின் மீது பட்டு வெடித்தது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸார், அடையாளம் தெரியாத நபர்களை விரட்டிச் சென்றனர். இந்த சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் போலீஸார், சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்தனர். டூ வீலரில் வந்த நான்கு பேர் அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுச் செல்வது பதிவாகியிருந்தது.
குண்டர் சட்டம்
இந்த வழக்கில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஜீவானந்தம், பாலன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. கடந்த மூன்று மாத காலத்துக்கும் மேலாக இவர்களுக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை.
பெரியார் சிலைக்கு மாலை
நேற்று கோவை மத்திய சிறையில் இருந்து வெளியில் வந்தவர்களுக்கு பெரியார் தி.க பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் சிறப்பான வரவேற்பு அளித்தார். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரப்படுத்தினார் ஆறுச்சாமி. அவர்கள் இருவரும் மகிழ்ச்சியோடு பெரியார் படிப்பகத்தில் இருந்த பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பாஜகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இதுகுறித்து நம்மிடம் பேசிய பெரியார் தி.க தொண்டர்கள், " ஹெச்.ராஜாவின் கருத்துக்களுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வருகிறோம். அதிலும், பெரியார் சிலையை உடைப்பேன் என அவர் பேசிய பேச்சு, தி.க தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அது என்னுடைய பதிவு அல்ல என ராஜா விலகிக் கொண்டாலும், மாநிலம் முழுவதும் பா.ஜ.கவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது.
கைது நடவடிக்கை
அன்றைய தினத்தில், சென்னையில் சிலரது பூணூல்களை அறுத்து எறிந்ததாகவும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. அதேநாளில்தான் பா.ஜ.க அலுவலகத்தின் மீது பெட்ரோல் நிரப்பப்பட்ட குண்டுகள் வீசப்பட்டன. கைது நடவடிக்கைக்குப் பயந்து இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. பெரியாரின் வலிமையை உணர்த்துவதற்காகவே இவ்வாறு செயல்பட வேண்டியது வந்தது" என்கின்றனர்.