பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்ககோரி நாளை மறுதினம் திரவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
சென்னை: பிற்படுத்தப்பட்டோருக்கு சட்ட ரீதியாக 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நாளை மறுதினம் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பிற்படுத்தப்பட்டோருக்கு சட்ட ரீதியாக 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்; ஆனால், வெறும் 12 சதவிகித அளவே அளிக்கப்பட்டு வருகிறது. வேறு சில துறைகளில் 7 சதவிகிதம் கூட எட்டப்படவில்லை. உரிய உரிமையை ஈட்ட சமூகநீதி சக்திகள் ஒன்றிணைந்து போராடவேண்டும்.
சட்டப்படியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும் விரோதம் என்று தெரிந்திருந்தும், மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் மாநிலத்தில் ஒரு சட்டம் இயற்றுவது இட ஒதுக்கீடுப் பிரச்சினைக்கான அடிப்படையைத் தகர்க்க ஒரு வெள்ளோட்டம் விட்டுப்பார்க்கிறார்கள் என்றுதான் கருதப்பட வேண்டும்.
தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்கிற கண்ணோட்டம் வலிமை பெறவேண்டிய கட்டாயத்தில், அவசியத்தில், காலகட்டத்தில் திசை திரும்பப் பார்க்கிறார்கள். இதில் சமூகநீதி சக்திகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒரு பக்கம் மதவாதம் இன்னொரு பக்கம் சமூகநீதிக்கான சவால் இவற்றை முன்னிறுத்தி அரசியலையும், தேர்தலையும் அணுகவேண்டியது மிக அவசியம். இவற்றை முன்னிறுத்தி திராவிடர் கழகம், தன் பிரசார பணியைச் செய்யும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். வரும் 2-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியை கடந்து அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றும் 0கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு வீரமணி அறிக்கையில் கூறியுள்ளார்.